யாழில் நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம் : தமிழ் எம்பிக்களும் பங்கேற்பு!
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் (28) யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது.
இந்த போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.
குறித்த போராட்டம் யாழ்.செம்மணியில் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
உண்ணாவிரதப் போராட்டம்
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டத்தின் ஆரம்பத்தில் அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் காற்றாலை மின் திட்டத்திற்கு இதன்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரின் அடாவடித்தனத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





