உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் நிலவும் இரசாயன உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கொடும்பாவியை எரித்து நுவரெலியா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
உரத் தட்டுப்பாட்டால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட விவசாயிகள், தமது செய்கைகளுக்கான, உரத்தை விரைவில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
நுவரெலியா மாவட்ட பயிர்ச்செய்கையாளர்கள் இன்று (17) நுவரெலியா நகரத்தில் பிரதான வீதியில் பேரணியாகச் சென்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
பேரணியாகச் சென்ற விவசாயிகள் தமது பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இறுதியில் தபால் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான விவசாயிகளுடன், பௌத்த தேரர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.