பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம் (நேரலை)
இரண்டாம் இணைப்பு
முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
யாழ்.மாவட்டத்திலே காலை 9 மணியளவில் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற வகையில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இப்போராட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி , தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவளிப்பதுடன் பல பொது அமைப்புகளும் இணைந்துள்ளன.
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் உரிய நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக மனிதச் சங்கிலிப் போராட்டம் இன்று(4) புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மனிதச் சங்கிலி போராட்டம் மருதனார் மடத்தில் காலை 09. 00 மணிக்கு ஆரம்பமாகி யாழ். நகர் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப்போராட்டத்தில் மாபெரும் மனிதச் சங்கிலியாகக் கைகோர்த்து நீதி கோரிட திரண்டு வரவேண்டுமென தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.


