ரணில் அதிபராக போராட்டக்காரர்களே காரணம் - மொட்டுக் கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை!
"இலங்கையின் அதிபராக ரணில் விக்ரசிங்க தெரிவு செய்யப்பட்டது மொட்டுக் கட்சியினால் அல்ல போராட்டக்காரர்களின் மூலமே"
இவ்வாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்தவை நீக்கியது தவறு - பஸில்

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"போராட்டக்காரர்களின் மூலமே ரணில் விக்ரமசிங்க பிரதமர் ஆகினார், பின்னரே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரை பிரதமராக்கியத்துக்கும் மொட்டுக் கட்சிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.
மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும், எதிர்க்கட்சியில் இருந்து ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்களாலேயே கோரப்பட்டது.

நாங்கள் மஹிந்தவை இறுதிவரை பிரதமராக வைத்திருக்கும் நிலைப்பாட்டிலேயே இருந்தோம்.
ஆனால் அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவரது சுய விருப்பத்தின் அடிப்படையில் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று ரணிலை பிரதமராக்கினார்.
பின்னர்,நாடாளுமன்றத்தின் ஊடாக மக்கள் பிரதிநிதிகள் ரணிலை பதில் அதிபராக்கினார்கள்.
ஆகவே ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கும், அதிபராக தெரிவு செய்யப்பட்டதற்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.
மஹிந்தவை பிரதமர் பதவியை விட்டு நீக்கியது தவறு, அவர் பிரதமராக நீடித்திருக்க வேண்டும்" என பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.