மீண்டும் தையிட்டியில் போராட்டம் ஆரம்பம்
யாழ்ப்பாணம் தையிட்டியிலுள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தியும் பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காண்பிக்கும் வகையில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஒன்றிணையுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ச்சியான போராட்டம்

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிரான போராட்டத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில், இன்று மற்றுமொரு கட்டப் போராட்டத்தை மாலை 4 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருடன் கனகரட்னம் சுகாஸ் மற்றும் கட்சியின் மகளிர் பிரிவினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இனப்படுகொலை செய்த இராணுவமே வெளியேறு என சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டகாரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கஜேந்திரகுமாரின் கருத்து

பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாளை போயா பொதுவிடுமுறையை மையப்படுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கொள்கை அடிப்படையில் ஜனநாயக ரீதியாகவும் சட்ட ஒழுங்குகளை மீறாத வகையிலும் போராட்ட கலாசாரத்தை முன்னெடுத்துவருவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த போராட்டமானது நாளை மாலை 7.00 மணி வரை தொடரும் என முன்னணி அறிவித்துள்ள நிலையில், விகாரை அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
படங்கள்



