மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்ற காவல்துறை அதிகாரி விபத்தில் உயிரிழப்பு!
புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியாவெவ பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கற்பிட்டி நுரைச்சோலை காவல்துறை நிலையத்தில் கடமையாற்றி வந்த சாலியாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த காவல்துறை சர்ஜன்ட் அருன பிரிய (வயது 50) எனும் ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த காவல்துறை உத்தியோகத்தர் சனிக்கிழமை இரவு நுரைச்சோலை காவல் நிலையத்திலிருந்து கடமையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது,
அநுராதபுரம் பகுதியிலிருந்து பயணித்த கெப் வாகனம் ஒன்று, காவல்துறை உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சாலியாவெவ காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இதன்போது படுகாயமடைந்த காவல்துறை உத்தியோகத்தரை அங்கிருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சாலியாவெவ காவல்துறையினர் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.