றம்புக்கண துப்பாக்கிசூட்டு சம்பவம் - பின்னணியில் யார் - வெளிவரும் மேலதிக தகவல்கள்
கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள மூன்று அமைச்சர்களே றம்புக்கண போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு காவல்துறை அத்தியட்சகர்களுக்கு உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“றம்புக்கணையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக நடவடிக்கையில் 3 ஆயுதங்களின் ஊடாக 90 ரவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. போராட்டத்திற்கு முந்தைய நாள் இடம்பெற்ற சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் தலைமையிலான கூட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டாம் என்றே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அப்படியிருக்க போராட்டத்தின் போது எவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்துமாறு சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன என்பவரே உத்தரவிட்டுள்ளார். அவருக்கு அந்த உத்தரவை வழங்குமாறு கோரியது காவல்துறை மா அதிபரோ அல்லது சிரேஷ்ட பிரதி காவல்துறை அதிபர்களோ அல்ல.
மாறாக ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மூவரே கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டை நான் பொறுப்புடனேயே தெரிவிக்கின்றேன்.
கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள அமைச்சர்களே இவ்வாறு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு குறித்த காவல்துறை அத்தியட்சகர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
