ரணிலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை! உத்தரவாதம் வழங்கினால் ஆதரவு - பகிரங்க அறிவிப்பு..!
குறுகிய காலத்திற்குள் பொதுத் தேர்தலொன்றுக்கு செல்ல தயாராக இருந்தால், சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
உத்தரவாதம் வழங்கினால் ஒத்துழைப்பு வழங்குவோம்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், மகாநாயக்க தேரர்கள், புத்திஜீவிகள், பேராசிரியர்கள் என அனைவரும் விரைவில் ஒரு தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.
எனவே, எமது ஆதரவு சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு வேண்டுமாக இருந்தால், மிக விரைவில் பொதுத் தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும்.
இதற்கான உத்தரவாதத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க எமக்கு வழங்கினால் நாம் ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவே உள்ளோம்.
முன்னோக்கி கொண்டு செல்ல தேர்தல் அவசியம்
அதனைவிடுத்து, இதேபோன்று இந்த நாட்டை 2025 ஆம் ஆண்டுவரை கொண்டுசெல்ல முடியாது. இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது. இதனை நம்பி, சர்வதேச நாடுகள் ஒருபோதும் கடன் கொடுக்காது.
நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டுமாயின் நாடாளுமன்ற தேர்தலொன்று அவசியமாகும். குறைந்தது 6 அல்லது ஒரு வருடத்திலேனும் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.
இதனைத்தான் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடமும் மகாநாயக்க தேரர்கள், புத்திஜீவிகள் என அனைவரும் வலியுறுத்தினார்கள் ", எனக் குறிப்பிட்டார்.
