உடனடியாக ரணில் நியமித்த விசாரணைக்குழு
உடனடியாக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு
அதிபர் ரணில் விக்கிரமசிங்கவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விசாரணை ஒன்றிற்காக மூவரடங்கிய குழுறை நியமித்துள்ளார்.
ஜப்பானின் தைசே நிறுவனத்திடம் இருந்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கேட்டதாக சமூக ஊடகங்கள், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
நிமால் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் அண்மையில் மேற்கொண்ட அறிவிப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றை நடாத்துமாறு மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி, அதிபர் சட்டத்தரணி குசலா சரோஜினி வீரவர்தனவின் தலைமையிலான இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் எஸ்.எம் விக்கிரமசிங்க, ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு அதிகாரி எஸ்.எம்.ஜீ.கே பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை அறிக்கையை ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தனக்கு கையளிக்குமாறு அதிபர் அறிவித்துள்ளார்.

