பட்டலந்த வதை முகாமுடன் ரணிலுக்கு நெருங்கிய தொடர்பு : அமைச்சர் பகிரங்கம்
ஜே. ஆர். ஜயவர்த்தன (J. R. Jayewardene) அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதை போன்று ரணில் விக்ரமசிங்கவும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Viddyarathna) தெரிவித்தார்.
அத்துடன் பட்டலந்த வீட்டுத்தொகுதிக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பட்டலந்த சித்திரவதை முகாம்
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ”பட்டலந்த சித்திரவதை முகாமில் பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், தொழிற்சங்கவாதிகள் உட்பட பலர் படுகொலை செய்யப்பட்டனர். இது வெறும் அறிக்கையல்ல, இலங்கையின் ஹிட்லர் பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதத்தை அரச பயங்கரவாதம் என்றே அழைக்க வேண்டும். பட்டலந்த வீட்டுத்தொகுதிக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இளைஞர்களின் இரத்தம் மற்றும் உடலை ரணில் விக்ரமசிங்க நிலத்துக்கு உரமாக்கினார்.
இந்த சித்திரவதை முகாமை போன்று நாடு முழுவதும் அரச ஆதரவுடன் பல சித்திரவதை முகாம்கள் காணப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சித்திரவதை முகாம்களுக்கு தலைமை தாங்கினார்கள்.
உண்மைக்காக போராடியே பலர் உயிர் தியாகம் செய்தார்கள். அநீதியாக கொல்லப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதியை நாங்கள் பெற்றுக்கொடுப்போம்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்
பட்டலந்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பட்டலந்த விவகாரத்தை மக்கள் விடுதலை முன்னணி மீது ரணில் மேற்கொண்ட முயற்சிகள் அவருக்கே எதிராக திரும்பியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதை போன்று தான் அவரது மருமகனான ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தினார். அதன் பெறுபேறு பட்டலந்த சித்திரவதை முகாம்.
1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை எமது வைப்பிலிடுவதற்கு ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கிறார்.
உண்மை நிச்சயம் வெளிவரும். எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
