இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பல மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய ரணில்
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே ரணில் விக்ரமசிங்க இன்று (28) அழைக்கப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஏப்ரல் 17ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
நீண்ட வாக்குமூலம்
எனினும், அன்றைய தினம் அவரால் முன்னிலையாக முடியாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு இன்று (28) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்குச் சென்றிருந்த ரணில் விக்ரமசிங்க மிக நீண்ட வாக்குமூலத்தினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், ரணில் விக்ரமசிங்கவிடம் 3 மணி நேர வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் அவர் 10 பக்கங்களுக்கான வாக்குமூலத்தினை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
