அதிபர் ரணிலின் வடக்கு மாகாணத்திற்கான இலக்கு வெளியானது
வடக்கை பொருளாதாரத்தில் வலுவடைந்த மாகாணமாக மாற்றுவது அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ((Ranil Wickremesinghe) இலக்காக உள்ளதென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P. S. M. Charles) தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான கு.திலீபன் ஆகியோரின் தலைமையில் இன்று (27) நடைபெற்றது.
இதன்போது, அதிபர் ரணிலின் வழிகாட்டுதலுக்கு அமைய வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணிலின் ஆசை
இந்த நிலையில், தொழில் அற்றோர் பிரச்சினைக்கு முன்னெடுக்கப்பட்ட தீர்வு திட்டங்கள் தொடர்பிலும், வாழ்வாதார உதவி திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து ஏனைய மாகாணங்களை போல வடக்கையும் பொருளாதாரத்தில் மேம்பட்ட மாகாணமாக மாற்றுவதே ரணிலின் ஆசை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, இந்த திட்டத்திற்கு தேவையான அடிப்படை கட்டுமானங்களையும், வசதிகளையும் அதிபர் பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் பொருளாதாரம்
இதேவேளை, பொருளாதார வலயங்களை ஸ்தாபிப்பதோடு, பலாலி விமான நிலைய சேவைகளையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறினார்.

மேலும் இவ்வாறான திட்டங்கள் ஊடாக மாகாணத்தின் பொருளாதாரத்தை பலப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening