அதிபராக பதவியேற்ற ரணில் மேற்கொண்ட முதலாவது உயர் மட்ட விஜயம் (படங்கள்)
பாதுகாப்பு தலைமையகத்திற்கு விஜயம்
முப்படைகளின் தளபதி அதிபர் ரணில் விக்கிரமசிங்க இன்று (21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தார்.
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக இன்று காலை நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அதிபர் பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தார்.
அமைச்சுக்கு வருகை தந்த அதிபரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றார்.
சுருக்கமான கலந்துரையாடல்
அதிபர் விக்கிரமசிங்க அரச ஸ்தாபனத்திற்கு தனது முதல் விஜயத்தின் போது, நாட்டின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்து சுருக்கமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
அமைச்சர் திரான் அலஸ், சட்டமா அதிபர், அதிபரின் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள், காவல்துறை மா அதிபர், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர், அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
