சூடு பிடிக்கும் கப்பல் விவகாரம் - ரணில் - சீன தூதுவர் மூடிய அறைக்குள் முக்கிய பேச்சு
மூடிய அறைக்குள் முக்கிய பேச்சு
சீன கப்பல் விவகாரம் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சீனாவுக்கான இலங்கை தூதுவர் Qi Zhenhong ஆகியோர் சனிக்கிழமை (06) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனத் தூதுவரின் வேண்டுகோளுக்கு இணங்க மூடிய அறைக்குள் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கைக் கடற்பகுதியில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு 'யுவான் வாங் 5' என்ற சீனக் கப்பலானது வருகை தரவுள்ளமை இந்த பிராந்தியத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பின்னணியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
உறுதிப்படுத்திய பந்துல குணவர்தன
முதலில் இலங்கை அதிகாரிகள் அப்படி ஒரு கப்பல் வரும் என்று எந்த தகவலும் இல்லை என்று கூறினர். எனினும், சில நாட்களுக்குப் பின்னர், எரிபொருள் நிரப்புதல் மற்றும் இடைத்தங்கலுக்காக கப்பல் ஓகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்திருக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன உறுதிப்படுத்தினார்.

இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகளின் கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்குச் செல்வது வழமை என்றும் இலங்கை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள கோரிக்கை
எனினும், இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அரசாங்கங்களுக்கிடையில் “மேலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் வரை” கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனத் தூதரகத்திடம் வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.