பெரும் நெருக்கடியில் சிறிலங்கா - ரணில் வெளியிடவுள்ள விசேட அறிவிப்பு
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீண்டு வருவதற்கும் , தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளக்கூடிய அடிப்படை நடவடிக்கைகள் குறித்து நாட்டுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe)தெரிவித்துள்ளார்.
சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவை அவரது இல்லத்தில் சந்தித்த போது ,கடந்த சில நாட்களாக பொருளாதார துறையில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் பலருடன் கலந்துரையாடியதாகவும், நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீண்ட கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் முன்னாள் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் ,நாட்டின் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக இந்த பெரும் பொருளாதார நெருக்கடியில், குறைந்த பட்சம் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் உடன்பாட்டுக்கு வர வேண்டும். நாங்கள் தேசிய அரசாங்கங்களை அமைக்கச் சொல்லவில்லை எனவும் அவ்வாறு செய்வதால் எந்தப் பயனும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை தொடர்பான தீர்மானங்களைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) அடுத்த வாரம் கூடவுள்ளது.
இந்த கூட்டத்திற்கு பின்னரே ரணில் விசேட அறிக்கையை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
