இலங்கை சொத்துக்களை சீனாவிற்கு விற்கும் ரணில் - வசந்த முதலிகே குற்றச்சாட்டு
இலங்கையில் உள்ள சொத்துக்களை விற்பது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க சீன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கமைய அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
சீன விஜயம்

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கை அடுத்த மாதம் சீனாவுடன் பல ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளது. இந்த ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் சீனாவுக்கு பயணிக்கவுள்ளார்.
இதன் போது, சொத்துக்களை விற்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஏற்கனவே, இந்தியாவுக்கான விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்க பல ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தார்.
இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவை சந்தோஷப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட்டவை.
அவர் தனது பதவியை காத்துக் கொள்வதற்காகவும் பலப்படுத்துவதற்காகவும் மேற்கொண்ட நடவடிக்கைகள்.
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிகளை சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தமது சொந்த நலனுக்காக பயன்படுத்திக் கொள்கின்றன.
எதிர்ப்பு போராட்டம்

இந்த நிலையில், சர்வதேச நாடுகளுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை நாம் முறியடிக்க வேண்டும்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து நாம் தொடர்ந்தும் போராடுவோம்.
மக்கள் ஆணையற்ற ரணில்
விக்ரமசிங்கவுக்கு எவருடனும் எந்த ஒப்பந்தங்களையும்
மேற்கொள்ள முடியாதென்பதை அவர் நினைவில் கொள்ள
வேண்டும்” என்றார்.