கொடூரமான தாக்குதல் - மன்னிப்பு கோரவேண்டும் ரணில் - விடுக்கப்பட்ட அழைப்பு
மன்னிப்பு கோரவேண்டும் ரணில்
போராட்டக்காரர்கள் அதிபர் செயலக வளாகத்தை விட்டு வெளியேற விரும்புவதைப் பகிரங்கமாக வெளிப்படுத்திய சில மணிநேரங்களுக்குப் பின்னர், புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் அதற்கு அவகாசம் அளிக்காமல், நடத்திய தாக்குதல்கள் கொடூரமானது.
இவ்வாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கோட்டகோகம போராட்ட தளத்தில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க மன்னிப்பை கேட்கவேண்டும்.
சுயாதீன விசாரணை
பொதுமக்கள், ஊடகங்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீதான 'தாக்குதல்' குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நிலையம் கோரியுள்ளது.
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும். அத்துடன் அவசரகால பிரகடனத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க அதிபராக பதவியேற்று 24 மணித்தியாலங்களுக்குள்ளாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதிபராகவும், ஆயுதப்படைகளின் தளபதியாகவும் உள்ள விக்ரமசிங்க இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
இலங்கை எதிர்கொள்ளும் பல நெருக்கடிகளை ஒரு அரசியல் கட்சியினால் தீர்க்க முடியாது.
அத்துடன் இதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரின் அதிகாரங்களை நாட முடியாது என்றும் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
