ரணிலுக்கு தலைமை ஆசனம்! தயாராகும் கட்டமைப்பு அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகயவையும் மீண்டும் இணைப்பதற்கான கட்டமைப்பு குறித்த அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த அறிக்கை தொடர்பிலான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவாதாக குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த அறிக்கை எதிர்வரும் 22 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிடம் கையளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய கூட்டணி
இந்நிலையில் புதிய கூட்டணிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவிப்பதாக கட்சி உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்படுவது, ஒன்றாக அரசியல் செய்வது, தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவது, ஒரே கொள்கை, ஒரே சித்தாந்தம் மற்றும் ஒரே திட்டத்தின்படி செயல்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கபீர் ஹாஷிம் சுட்டிக்காட்டுகிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் சமகி ஜன பலவேகயவும் இணைந்து முன்னேறுவதற்கு பெரும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும், பல அடிமட்ட உறுப்பினர்களும் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
இதைக் கவனத்தில் கொண்டு, சமகி ஜன பலவேகய செயற்குழு மற்றும் அரசியல் குழுவின் வேண்டுகோளின் பேரில் இந்த அறிக்கையைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
