சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு பிணை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை சற்றுமுன்னர் பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சாவகச்சேரி- நாவற்குழி ப பகுதியில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசை நிகழ்வில், பாடலை பாடி அந்த பாடலுக்கு தனது இசை சேர்க்கையில் உருவான சொல்லிசை பாடலை இணைத்து சமூக ஊடகங்களில் சொல்லிசை கலைஞன் பகிர்ந்திருந்தார்.
அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் கடந்த 2ஆம் திகதி இளைஞனை கைது செய்து விசாரணைகளின் பின், மறுநாள் 03ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, இளைஞனை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இளைஞனை விடுதலை செய்யுமாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதேவேளை நேற்றைய தினம் (11) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை கோரி மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டமா அதிபர் பணிப்பு
இவ்வாறான நிலையில் இளைஞனுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அல்லாது, தண்டனை சட்ட கோவையின் பிரிவு 120இன் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் காவல்துறையினருக்கு பணித்திருந்தார்.

அதனை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து இளைஞன் சார்பில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் மன்றுக்கு கிடைக்காத காரணத்தால், பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
ஆனாலும் மீண்டும் நகர்த்தல் பத்திரம் ஊடாக மீண்டும் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், இளைஞனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - த.பிரதீபன்
முதலாம் இணைப்பு
சொல்லிசைப் பாடகர் வழக்கில் திருப்பம் : பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்
தாயக எழுச்சிப் பாடலை செம்மைப்படுத்தி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீத்சனின் வழக்கில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்ட நிலையில் சாதாரண வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சொல்லிசைப் பாடகரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ள நிலையில்17ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்து வழக்கு இன்று (12.06.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிணை வழங்க வாய்ப்பு
இந்த நிலையில் சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு பிணை வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதேவேளை கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை பாடகரை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை நேற்றைய தினம் (11) நடைபெற்றது.

அதன் போது சொல்லிசை கலைஞன் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கேசவன் சயந்தன், சொல்லிசை கலைஞனை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சாவகச்சேரி காவல்துறையினர் முற்படுத்தும் போது தாக்கல் செய்த B அறிக்கையில் உள்ள சில சட்ட முரணான விடயங்கள் சிலதை குறிப்பிட்டு , கலைஞனுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்கப்படுவதாகும், அது பாரதூரமான நீதி புரள்வு என மன்றில் தனது சமர்ப்பணத்தில் குறிப்பிட்டார்.
அத்துடன் எதிர்மனு தாரர்களான, சாவகச்சேரி காவல் நிலைய பொறுப்பதிகாரி, யாழ் மாவட்ட குற்ற விசாரணை பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்புவதனை விரைவில் அனுப்புமாறும், அறிவித்தல் திரும்பும் திகதியை இன்றைய தினமாக குறிப்பிட வேண்டும் எனவும் மன்றில் விண்ணப்பம் செய்தார்.
இதனையடுத்து எதிர்வரும் 23ஆம் திகதியை அறிவித்தல் திரும்பும் திகதியாக மன்று குறிப்பிட்டு, அந்த திகதிக்கு வழக்கினை ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |