RCB வெற்றி விழா 11 பேரின் பலிக்கு யார் காரணம் - அதிர வைக்கும் விசாரணை அறிக்கை
2025 ஐபிஎல் (IPL) கிண்ண வெற்றி விழாவின் போது, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் 11 பேர் பலியானமைக்கு ரோயல் செல்ஞ்சர்ஸ் பெங்களூரு அணியே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட குழு, குறித்த குற்றச்சாட்டை முன்வைத்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கை கர்நாடக முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழு குற்றம்
அறிக்கையின்படி, ஆர்.சி.பி என்ற ரோயல் செல்ஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிர்வாகம், நிகழ்ச்சியை நடத்திய டி.என்.ஏ., நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் சம்மேளனம் என்பன இந்த அனர்த்தத்துக்கு நேரடி காரணம் என்று விசாரணைக் குழு குற்றம் சுமத்தியுள்ளது.
குறுகிய காலத்தில் நிகழ்ச்சி நடத்த முடியாது என்று தெரிந்திருந்தும், இந்த அனர்த்தத்துக்கு காரணமானவர்கள் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
விரிவான காவல்துறை பாதுகாப்பும் மேற்கொள்ளப்படவில்லை நிகழ்வின் போது மைதானத்திற்குள் வெறும் 79 காவல்துறையினர் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நோயாளர் வாகன வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
முன்னதாக ஆர்பிசி அணியின் வீரர் விராட் கோலி லண்டன் செல்லவேண்டும் என்பதற்காகவே, குறித்த நிகழ்வு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டதாக சாட்சியம் அளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
