புதிதாக நியமனம் பெறப்போகும் 3000 பேர்- அமைச்சர் வழங்கிய உத்தரவு
இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மேலும் 3000 தாதியர்களை தாதியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (29) அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஏதாவது சிக்கல் இருப்பின் அது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
அமைச்சர் பணிப்புரை

சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சிறிரீ சந்திரகுப்தா உட்பட சுகாதார அமைச்சின் தாதியர் சேவை தொடர்பான அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனை சுட்டிக்காட்டினார்.
அதன்படி, இலங்கையில் தாதியர் சேவையில் ஏறக்குறைய 2500 பயிற்சியாளர்களையும் 500 தாதி பட்டதாரிகளையும் சேர்ப்பது இலக்காக உள்ளது. இதேவேளை, தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்படும் 2019/2020 உயர்தரப் பிரிவில் தோற்றியோருக்குரிய விண்ணப்பங்களுக்கான வர்த்தமானியை செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் வெளியிட சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
தாதியர் மாணவர்களாக பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 03 வருட தாதி பயிற்சிக்காக பரிந்துரைக்கப்படுவார்கள். மேலும், கடந்த ஜூலை மாதம், 3315 பேர் தாதியர் மாணவர்களாக பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர், மேலும் அவர்கள் 2018 / 2019 ஆம் ஆண்டு உயர்தர முடிவுகளின்படி தேர்ச்சி பெற்றவர்களாவர்.இவ்வாறு இலங்கையில் தாதியர் பயிற்சி பெறும் மாணவர் தாதியர்களின் எண்ணிக்கை சுமார் 6700 ஆகும்.
உலகளாவிய கொவிட் அனர்த்தம் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் தாதியர் ஆட்சேர்ப்பில் சில தடங்கல்கள் ஏற்பட்டாலும் எதிர்காலத்தில் தாதியர் ஆட்சேர்ப்பை உரிய முறையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
குறிப்பாக உயர்தரப் கல்வியை முடித்து இவ்வாறான சேவைகளை எதிர்பார்க்கும் இளைஞர், யுவதிகளுக்காக தொடர்ந்து பணியாற்றுவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வாறான சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்காக சாதகமாக பணியாற்ற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முறையான இடமாற்றம்

மேலும், தாதியர் சேவையில் இடமாற்றம் செய்வதற்கு முறையான இடமாற்ற நடைமுறையை பின்பற்றவும், பல வருடங்களாக ஒரே வைத்தியசாலையில் பணிபுரியும் பணியாளர்கள் கடும் அழுத்தத்தில் உள்ளதாகவும், எதிர்காலத்தில் குறிப்பிட்ட கால அவகாசத்தை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களை இடமாற்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும். முறையான வகையில் இடமாற்றம் செய்ய சுகாதார அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்நிகழ்வில், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சிறி சந்திரகுப்தா, மேலதிக செயலாளர் (நிர்வாகம் II) ஏஎம் வத்சலா பிரியதர்ஷனி, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம் II) எச். சாமிக்க கமகே மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டனர்.