மாநகரசபை ஆணையாளரின் அதிகாரம் குறைப்பு- ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான ஊழியர்கள்!
மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் கண்டன ஊர்வல ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரும் பதில் செயலாளருமாகிய தயாபரனின் கடமை அதிகாரத்தை மாநகரசபை அமர்வில் குறைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகரசபை ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஊர்வல ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகரசபை நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டையடுத்து அங்கு கடமைபுரியும் 950 ஊழியார்கள் அனைவரும் கடமையை ஒரு மணித்தியாலம் பகிஸ்கரித்து இன்று காலை 9.00 மணியளவில் மாநகரசபைக்கு முன்னால் ஒன்றிணைந்து ஆணையாளரின் சேவையை களங்கப்படுத்தாதே, ஆணையாளரின் அதிகாரத்தை குறைக்க நீங்கள் யார்?, ஊழியரை அதிகாரம் செய்யும் உரிமை உங்களுக்கு கிடையாது, அரசாங்கத்தில் கடமைபுரியும் உறுப்பினரே உங்கள் கடமையை துஷ்பிரயோகம் செய்யாதே, ஆணையாளர் எமது தலைவர், ஊழியர்கள் அடிமை இல்லை, நிர்வாகத்தில் அரசியல் வேண்டாம், போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் எந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர். மாநகரசபையிலிருந்து நகரின் மத்தியிலுள்ள மணிக்கூட்டுக்கோபுரம் வரை சென்று காந்தி பூங்காவில் சில நிமிடங்கள் தரித்து நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் மாநகரசபையை அடைந்த பின்னர் ஆளுநருக்கான மகஜர் ஒன்றை மாநகரசபை ஆணையாளரிடம் கையளித்த பின்னர் ஆர்ப்பாட்க்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.
இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியிலுள்ள சபை முதல்வருக்கும் புதிதாக கடமையேற்ற ஆணையாளர் தயாபரனுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து, கடந்த 8ம் திகதி சபையின் அமர்வில் ஆணையாளரின் அதிகாரத்தை குறைக்கும் பிரேரணை கொண்டுவரப்பட்டது.
அதன்போது சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட 18 பேர் சபையில் இருந்து வெளியேறிய நிலையில் 20 உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





