சமையல் கலை மூலம் புதிய பாதை! சாதனையாளர்களை உருவாக்கும் றீ(ச்)ஷா பண்ணை
கிளிநொச்சி (Kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் இளைஞர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட மூன்று நாள் சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலை பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு (05-08-2026) இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலை நிபுணர் தனுவின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ் இப்பயிற்சி அளிக்கப்பட்டது.
பணப்பரிசுகள்
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ஊக்கமளிக்கும் வகையில் பணப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

ஆயிரம் கவிதைகள் தொகுப்பின் ஆசிரியரான யோ. புரட்சி, நிகழ்வை மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கி, விழாவின் நோக்கத்தையும் சமூகப் பயனையும் அனைவரும் அறியச் செய்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையின் நிறுவனர் கந்தையா பாஸ்கரன், மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
ஒருங்கிணைந்த பண்ணை
தவறான வழிகளில் செல்லக்கூடிய இளைஞர்களைச் சரியான பாதைக்குக் கொண்டுவந்து, சுயதொழில் மற்றும் தன்னிறைவு நோக்கி வழிநடத்த இத்தகைய தொழில்முனைவுப் பயிற்சிகள் பெரும் பங்காற்றுகின்றன.

சோம்பலைத் தவிர்த்து உழைப்பை வாழ்க்கை முறையாக்கிக் கொண்டால், உலக அரங்கில் தமிழர்கள் சாதனையாளர்களாகத் திகழ முடியும் என்பதை இந்நிகழ்வு வலியுறுத்துகிறது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட குமாரு யோகேஸ்வரன், இப்பயிற்சி விழா தனக்கு ஒரு பெரிய வாழ்வியல் பாடமாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளதோடு, இளைஞர்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் அனைத்து உழைப்பாளர்களுக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







