எங்களிடம் பிரமாண்ட ஆயுதங்கள் உள்ளன..! ஊடகங்களுக்குப் பதிலடி கொடுத்த ட்ரம்ப்
அமெரிக்காவிடம் பிரமாண்ட அளவிலான போர்க்கருவிகள் மற்றும் ஆயுதங்கள் இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனின் (Pentagon) ஆயுதக் கையிருப்பு ஆபத்தான அளவில் குறைந்துள்ளதாக வெளியான ஊடக அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “அமெரிக்காவிடம் குறிப்பாகச் சில குறிப்பிட்ட வகையான போர்க்கருவிகள்' பாரிய அளவில் கையிருப்பில் உள்ளன.
பெருமளவிலான ஆயுதங்கள்
மேலும், தேவைக்கு ஏற்ப பெருமளவிலான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
நமது நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவிலான தொழிற்சாலைகளைக் கட்டி வருகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எந்த வகையான ஆயுதங்களைக் குறிப்பிடுகிறார் என்பதை அவர் தெளிவாக வரையறுக்கவில்லை.
அண்மையில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் படி, அமெரிக்க இராணுவத்தின் முதன்மையான THAAD (Terminal High Altitude Area Defense) ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பிற்கான இடைமறிப்பு ஏவுகணைகளில் (Interceptors) கிட்டத்தட்ட 80 வீதம் வரை செலவிடப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், பென்டகனின் மொத்த ஆயுதக் கையிருப்பு ஆபத்தான நிலைக்குக் கீழ் குறைந்துள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் சிரேஷ்ட தளபதிகள் எச்சரித்துள்ளதாகப் பல மூலாதாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |