எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவுக்கு செக் வைத்த அமெரிக்கா!
இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் அனுமதியை அமெரிக்காவிடம் இருந்து பெற்றுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ, அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அரசியல் சூழல் மாறியுள்ளது.
இந்தநிலையில், வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை அமெரிக்க நிறுவனங்களே இனி நிர்வகிக்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
வர்த்தக ஒப்பந்தம்
அத்தோடு, வெனிசுலாவின் தற்போதைய ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதைத் தவிர்க்குமாறு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.

இதற்குப் பதிலாகத் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வெனிசுலா மூலம் இந்தியா எண்ணெய் பெற்றுக்கொள்ளலாம் என அமெரிக்கா யோசனை முன்வைத்தது.
இதன் அடிப்படையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
கச்சா எண்ணெய்
இந்த இராஜதந்திர நகர்வின் ஒரு பகுதியாகவே, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகம் குறித்து இந்தியத் தலைவர்கள் இதுவரை எந்தவொரு தெளிவான விளக்கத்தையும் அளிக்கவில்லை.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய இறக்குமதி அனுமதி, இந்தியாவின் எரிசக்தித் தேவையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் இந்த நிபந்தனை வர்த்தகம், சர்வதேச அளவில் ரஷ்யாவைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்தும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |