வேட்டையாடுவதை நிறுத்துங்கள்! ராஜபக்ச அரசாங்கத்திடம் விநயமான கோரிக்கை
இலங்கை மக்களுக்கு உண்மைகளை அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சியினர் மற்றும் ஊடகவியலாளர்களை அடக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிடைக்கின்ற அதேவேளை, அரச நிறுவனங்கள் அரசியல்மயமாகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனூஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபையின் தரவுகள் காணாமல்போன விடயம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மனூஷ நாணயக்கார, எதிர்கட்சியையும் ஊடகவியலாளர்களையும் வேட்டையாடுவதை கோட்டாபய - மஹிந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“நாங்கள் திருடர்களை வெளிப்படுத்தும் போது எங்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கின்றனர். வெள்ளைப்பூண்டு மாபியாவை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களை வேட்டையாடுகிறார்கள். எனினும் இந்த திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிடைக்கின்றது. அதுதான் இன்று இடம்பெறுகின்றது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்களையும் பயன்படுத்தி, அரச அதிகாரிகளையும் பயன்படுத்தி உண்மை வெளிப்படுத்தப்படுவது தடுக்கப்படுகின்றது. இதுவொரு அடக்குமுறை.
நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும்போது அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்ற நிலையில், வெளியில் ஒரு வார்த்தையை வெளியிட்டால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கின்றனர்.
விமர்சிக்கும் ஊடகவியலாளர்களை அடக்குவதற்கு இந்த அரசாங்கம் அரச இயந்திரங்களை பயன்படுத்துகின்றது.
அரச நிறுவனங்கள் இன்று எதிர்க்கட்சியை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. அதனை நிறுத்துமாறு கேட்கின்றோம். இந்த அரசியல் மயமாக்கலை நிறுத்துங்கள் என கேட்கின்றோம்” என அவர் கூறியுள்ளார்.