மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எம்.பிக்களை நாடும் தேர்தல்கள் ஆணைக்குழு
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை நாடாளுமன்றம் செய்து தரவேண்டும் எனவும் இதற்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் (S. Achchuthan) தெரிவித்துள்ளார்.
முன்னைய நாடாளுமன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொண்டுவந்த தனி நபர் பிரேரணை போன்ற ஒன்றை தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்து அதனை நிறைவேற்றினால் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மாகாண சபைத் தேர்தல் தாமடைந்து வருகின்ற நிலையில் அதற்கான நகர்வுகள் தொடர்பில் ஊடகமொன்று வினவிய போதே மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
பிரேரணையை நிறைவேற்றல்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு முறையும் மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் இது தொடர்பான சட்ட ஏற்பாட்டை செய்து தருமாறு நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஒன்று எல்லை நிர்ணய அறிக்கையை நிறைவேற்றுங்கள். அல்லது பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதற்கு ஒரு பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுங்கள்.
2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய கலப்பு தேர்தல் முறைமைக்கு அமைவான எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதால் புதிய முறைமையில் தேர்தல் நடத்த முடியாத சூழல் காணப்படுகிறது.
இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம்
அதேவேளை பழைய முறைமையில் நடத்த வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்று கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும். எனினும் கடந்த சில வருடங்களாகவே இந்த இரண்டு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாமல் இருக்கின்றன.
அண்மையில் இலங்கைக்கு இந்தியப் பிரதமர் விஜயம் மேற்கொண்டபோது மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இரு தரப்பு சந்திப்புகளின் போதும் இது தொடர்பாக பேசப்பட்டது.
அத்துடன் மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதியில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் விமல் ரத்நாயக்கவும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
