கடும் வறட்சி - மீண்டும் மின்வெட்டு அபாயம்
நாடு முழுவதும் நிலவும் கடும் வறட்சி காரணமாக, பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்கள் வேகமாக வற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பயிர்களுக்கு நீர் வழங்குவதிலும் மின்சார உற்பத்தியிலும் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
மின்வெட்டு ஏற்படும்

வறட்சி நீடித்தால் போதியளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் மின்வெட்டு ஏற்படும் என மகாவலி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மகாவலி நீர்த்தேக்கங்களின் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் நிலந்த தனபால, கடும் வறட்சி காரணமாக மகாவலியில் உள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 50 வீதத்தை எட்டியுள்ளது என்றார்.
இதேவேளை, கடும் வறட்சி காரணமாக யால வில்பத்து, குமண, உடவலவ ஆகிய பூங்காக்களில் உள்ள விலங்குகளின் வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
வறட்சியால் அழிவடையவுள்ள நெற்செய்கை

இந்த பூங்காக்களில் உள்ள பல நீர்த்தேக்கங்கள் வறண்டு விட்டதாகவும் மேலும் பல நீர்த்தேக்கங்கள் வறண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தண்ணீர் பற்றாக்குறையுடன் வனவிலங்குகள் உணவுப் பற்றாக்குறையையும் எதிர்நோக்குவதாகத் தெரிவித்த வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம், இந்த பூங்காக்களின் சுற்றுலா வலயங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த முறையில் பராமரிக்கும் நோக்கில், அந்த பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் தொடங்கியுள்ளது என்றார்.
இதேவேளை, உடவளவ நீர்த்தேக்கத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள 65,000 ஏக்கர் நெற்செய்கை வறட்சி காரணமாக அழிவடையும் அபாயத்தில் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இவ்வருட நெல் உற்பத்தியும் பாரியளவில் பாதிக்கப்படலாம் என தெரிவித்த அமைச்சர், வறட்சி காரணமாக பயிர்களுக்கு 3000 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பத்து நாட்களுக்கு மழை இல்லை என்றால்

இதேவேளை, சமனல ஏரி நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 87.9 மில்லியன் கனமீட்டராக குறைந்துள்ளதாகவும், இன்னும் பத்து நாட்களுக்கு மழை இல்லை என்றால் 60 மில்லியன் கனமீட்டராக குறையும் எனவும் மின்சார சபை அதிகாரிகள் விவசாய அமைச்சரிடம் தெரிவித்தனர். இதன்காரணமாக எதிர்வரும் காலங்களில் தென் மாகாணத்தில் ஒரு மணித்தியாலம் முதல் மூன்று மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு ஏற்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வறட்சி காரணமாக அநுராதபுரம் மாவட்டத்தின் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் பராமரிக்கப்படும் பல நடுத்தர அளவிலான குளங்கள் வறண்டு போயுள்ளதுடன், மத்திய அரசாங்கத்தின் கீழ் பராமரிக்கப்படும் பல பாரிய குளங்களின் நீர்மட்டம் மிகவும் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வடமத்திய மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் பராமரிக்கப்படும் குளங்களின் எண்ணிக்கை 3000க்கும் அதிகமாகும். கடும் வறட்சி காரணமாக இந்த ஏரிகள் வறண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏராளமான மக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், அந்த பகுதிகளில் உள்ள வன விலங்குகள் தண்ணீர் இன்றி கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் ஜயந்த ஹேரத், அநுராதபுரம் மாவட்டத்தில் தற்போது சுமார் எண்பது வீதமான குளங்கள் வற்றிவிட்டன. எதிர்காலத்தில் மழை பெய்யாவிட்டால் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நிலைமை மோசமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் வறட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வறட்சி காரணமாக இந்த மாவட்டங்களில் பல பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர், பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தால் மின் உற்பத்தி செய்வதில் சிக்கல்கள் ஏற்படுவதுடன், மின்வெட்டையும் கூட நாட வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.