கிராமசேவகர் மீது தாக்குதல் மேற்கொண்ட கும்பல்! கருப்புப் பட்டியுடன் எதிர்ப்பு
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் செம்மண்ணோடை கிராம சேவை உத்தியோகத்தர் தாக்கப்பட்டமை தொடர்பில் இன்று கிராம சேவை உத்தியோகத்தர்கள் கருப்புப்பட்டி அணிந்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் ஒரு கிராம சேவை உத்தியோகத்தர் மாத்திரம் கடமையாற்றி வருவதை அவதானிக்க முடிந்தது.
கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எம்.சாதாத் கடந்த 2021.01.11ம் திகதி வெள்ள நிவாரணப்பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் வேளையில் வெள்ளத்தால் பாதிப்படையாத குறித்த கிராமத்தை சேர்ந்த ஒரு குழுவினர் தங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து தாக்கப்பட்ட நிலையில் குறித்த கிராமசேவகர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
கிராம சேவை உத்தியோகத்தர் அன்று இரவே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் ஏழு சந்தேக நபர்களில் இரண்டு சந்தேக நபர்கள் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையவர்களை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்யாத காரணத்தினால் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகத்தர்கள் கருப்புபட்டி அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே உடனடியாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.சாதாத் கடமையில் இருக்கும் போது தாக்கிய மிகுதி ஐந்து நபர்களையும் உடனடியாக வாழைச்சேனை பொலிஸார் கைது செய்ய வேண்டும் என்றும், கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி கிராம சேவை உத்தியோகத்தர்கள் கருப்புபட்டி அணிந்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோக்கத்தர்கள் சங்கத்தினால் கோறளைப்பற்று மத்தி மற்றும் வாகரை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை 206டீ பிரிவில் கடமையாற்றும் கிராம உத்தியோக்கத்தர் தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தாது கடமையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.





