சிறிலங்காவுக்கு பலத்த அடி! ஜெனிவா தீர்மானத்தால் மீண்டும் ஐ.நா காழ்ப்பு
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் இலங்கைக்கு பாரிய பிரச்சினை உருவாகியுள்ளதாகவும், சர்வதேசத்தை வென்றதாக கூறிக்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இது பலத்த அடியாகும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், வாக்களிப்பில் இருந்து விலகிய நாடுகளை வெற்றிகொள்ளும் வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் இருக்கவில்லையெனவும் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போது சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஜெனிவா தீர்மானம்

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஒரு நாடு என்ற வகையில் பாரிய பிரச்சினையாகும்.
சர்வதேசத்தை வென்றதாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கத்திற்கு இது பலத்த அடியாகும். வரலாற்றில் முதல் தடவையாக பொருளாதார குற்றங்கள் தொடர்பான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
நவீனமயமாக்கப்பட்ட உகந்த திட்டம்

வாக்களிப்பில் இருந்து விலகிய நாடுகளை வெற்றிகொள்ளும் வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் இருக்கவில்லை. உலக நாடுகளுடன் சர்வதேச ரீதியாக கையாளக்கூடிய முறையான திட்டமிடலுடன் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.
பொருளாதார நடவடிக்கைகளை குறுகிய சட்டங்களுக்குள் சுருக்கி தற்போதுள்ள பிரச்சினையிலிருந்து மீள முடியாது. மாறாக, நவீனமயமாக்கப்பட்ட உகந்த திட்டம் உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.
கடும்போக்கு அரசியல்வாதிகளின் காழ்ப்புணர்வு

இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நேற்றுமுன்தினம் நிறைவேற்றப்பட்ட பின்னணியில் சிறிலங்காவின் கடும்போக்கு அரசியல்வாதிகள் மீண்டும் தமது காழ்ப்பு கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
சிறிலங்கா படையினரை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கு ஒப்பான நகர்வுகளை மேற்குலகம் செய்வதான கண்டனங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.