தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
வீதி விபத்துக்கள் அண்மைய காலமாக தமிழர் தாயகத்தை உலுக்கி வருகின்றன. ஒரு காலத்தில் இனவழிப்புப் போரினால் எமது உறவுகளை இழந்ததைப் போல இப்போது தினமும் வீதி விபத்துக்களால் நடக்கும் மரணங்கள் பெரு அதிர்ச்சியை உண்டுபண்ணுகின்றன.
சாதிக்கத் துடித்த மாணவன், ஒரு இளந்தாய், இப்போது ஒரு கல்வியியலாளன் என்று மண்ணின் வளத்தை வீதி விபத்துக்கள் அழித்துவிட்டன. ஓய்வுபெற்ற அதிபர் பெருமாள் கணேசன் வீதி விபத்தில் கொல்லப்பட்டிருப்பது கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகத்திற்குப் பேரிழப்பாக அமைந்துள்ளது.
கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில், காவல் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீதிப் பாதுகாப்பு நடைமுறைகள்
பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய இடத்திலேயே இவ்வாறான உயிர்ப்பலி நிகழ்ந்திருப்பது, வீதிப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சாரதிகளின் பொறுப்புணர்வு குறித்து மீண்டும் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.
ஒரு கண நேர அலட்சியம் ஒரு குடும்பத்தையும் ஒரு சமூகத்தையும் ஈடு செய்ய முடியாத இழப்புக்குள் தள்ளியிருக்கிறது.
பல தசாப்தங்களாக கல்விப் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை வழிநடத்திய அவர், ஒரு ஆசிரியராக மட்டுமன்றி சமூக அக்கறை கொண்ட கல்வியாளராகவும் மதிக்கப்பட்டவர்.

அவரது பணிவும் ஒழுக்கமும் கல்வி வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பும் அவரை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தனித்துவமான இடத்தில் நிலைநிறுத்தியிருந்தன.
பெருமாள் கணேசனின் மறைவு அவரது குடும்பத்தினருக்கான தனிப்பட்ட துயரமாக மட்டுமல்லாது, கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் ஒரு வெற்றிடமாகவும் பதிவாகியுள்ளது.
கல்வியால் சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்த ஒரு மனிதரை வீதி விபத்து பறித்துச் சென்றிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
அவரது சேவைகளையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூரும் இந்நேரத்தில், மேலும் பல உயிர்களைப் பாதுகாக்கும் வகையில் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பொறுப்புணர்வும் நடைமுறைகளும் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
ஒரு இளந்தாயின் இழப்பு
கிளிநொச்சி கரடிப்போக்கு – உருத்திரபுரம் வீதியில் அண்மையில் இடம்பெற்ற கோர விபத்து ஒரு குடும்பத்தின் வாழ்வையே சிதறடித்துவிட்டது.
தனது மகளை பாடசாலையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்த தாயின் பயணம், சில நொடிகளில் மரணப் பயணமாக மாறியதுதான் பெருஞ்சோகம். அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரின் அருமையைக் கூட உணராது, வீதியில் பொறுப்பின்றி போக்குவரத்து விதிகளை மீறி வந்த இளைஞர்களால் ஒரு தாயின் உயிரைக் காவுகொள்ளப்பட்டுள்ளது.

பெரியளவிலான மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் அப்பகுதியில் மிக வேகமாகச் சுற்றித்திரிந்துள்ளனர். மேலும் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை வைத்தியசாலை ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது இந்த விபத்தின் பின்னணியில் இருக்கும் சமூகச் சீரழிவை எடுத்துரைக்கிறது.
போதை, வேகம், பொறுப்பின்மை என்பவற்றின் கூட்டுச் செயலே இன்று ஒரு குடும்பத்தை துயரத்தின் இருளில் தள்ளியுள்ளது. ஒரு தாயை இழந்த பிள்ளையின் மனவலி எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது.
காலை பள்ளிக்குச் சென்ற மகள், மாலையில் தாயின் கரங்களைப் பற்றிக் கொண்டு வீடு திரும்ப வேண்டிய நிலையில் இருந்தாள். ஆனால் அவள் விபத்தால் மூச்சுப் பேச்சற்றிருக்கும் தாயின் உடலைத்தான் கண்டாள். இளைஞர்கள் வேகத்தை வீரமென நினைக்கும் மனப்போக்கினால் இக் குழந்தை அநாதரவாக்கப்பட்டுள்ளாள்.
ஒரு சாதனை வீரனை சாகடித்த சாகசம்
சில தினங்களின் முன்பு, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த நகுலேஸ் டினோஜன் (ஹனிஷ்) பற்றிய செய்தியும் எங்கள் மண்ணை வெகுவாக உலுப்பிவிட்டிருக்கிறது.
அது ஒரு இளைஞனின் உயிரிழப்பு மட்டுமல்ல அது; போரால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பம் மீண்டும் எழுந்து நிற்க முயன்ற கனவுகளின் சிதைவாகவும் மாறியது என்பதுதான் இங்கே பெரும்வேதனை.
ஹனிஷ் ஒரு முன்னாள் போராளியின் மகன். போரின் வலிகளையும் இழப்புகளையும் தாண்டி தனது பிள்ளைகளை கல்வியாலும் ஒழுக்கத்தாலும் உயர்த்த வேண்டும் என்று போராடிய குடும்பத்தின் மகன்.
அவரது தந்தை சிறைவாசத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் குடும்பத்தை மீள உருவாக்கும் முயற்சியில் வாழ்ந்து வந்தார். ஒரு சகோதரி சட்டத்தரணியாக உயர்ந்துள்ளார். இளைய சகோதரி கல்வியிலும் விளையாட்டிலும் திறமையுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
அந்தக் குடும்பத்தின் ஒவ்வொரு முன்னேற்றமும், போரின் சாம்பலிலிருந்து மீண்டும் எழும் வாழ்க்கையின் சாட்சியாக இருந்ததைச் சாட்சியெனக் கண்டிருக்கிறேன்.

ஹனிஷின் தங்கை என் வகுப்பு மாணவி. தங்கையின் கல்வி நிலவரத்தை அறிய பெற்றோர் சந்திப்பிற்கு வருவான். அமைதியாக இருப்பான். அதிகம் பேசமாட்டான். மாலை நேரங்களில் மைதானத்தில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவதை காண்பேன். உடலை வருத்தி, வியர்வையை சிந்தி, எதையோ அடைய வேண்டும் என்ற உறுதியுடன் ஓடிக்கொண்டிருப்பான்.
“தேசிய மட்டத்தில் சாதிக்க வேண்டும்” என்பதே அவனது கனவு என்று ஒருநாள் சொல்லியிருந்தான். ஆனால் அந்தக் கனவுகள் வீதியில் சிதறிப்போயின.
துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த அவனை, பின்னால் கட்டுப்பாட்டை இழந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவன் பின்னர் உயிரிழந்தான்.
இந்த விபத்து ஒரு சாதாரண விபத்தல்ல. பொறுப்பற்ற சாகசங்களும் கவனக்குறைவான வீதி நடத்தைகளும் எவ்வளவு கொடிய விளைவுகளை உருவாக்குகின்றன என்பதற்கான இன்னொரு துயரமான சான்று இது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் கையை விட்டு வண்டியை செலுத்தி சாகசம் செய்ததாக கூறப்படுகிறது. சில நொடிகளின் அலட்சியம், ஒரு குடும்பத்தின் முழு வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றிவிட்டது.
ஒரு தந்தையின் நம்பிக்கை, ஒரு தங்கையின் அன்பு, ஒரு குடும்பத்தின் எதிர்காலம் என்று அனைத்தும் ஒரு கணத்தில் சிதறிவிட்டன. வீதிகளை சாகசங்களை நிரூபிக்கும் இடமாக இன்றைய தலைமுறையினர் கருதுகின்றனரா? அவை உயிர்கள் பயணிக்கும் இடமல்லவா?
வேகம், கவனக்குறைவு, அசட்டுத்தனம் ஆகியவை சிலருக்கு விளையாட்டாகத் தோன்றலாம். ஆனால் அதன் முடிவில் ஒரு குடும்பம் வாழ்நாள் முழுவதும் தாங்க முடியாத துயரத்தை சுமக்க நேரிடுகிறது.
ஏன் இந்த விபத்துகள்
இளைஞர்கள் மத்தியில் வேகப்போட்டி, சாகச ஓட்டம், பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமை போன்ற இயல்புகள் அதிகரித்துள்ளன. போருக்குப் பிந்தைய மனஅழுத்தங்களும் சமூக மாற்றங்களும் இளைஞர்களின் அபாயகரமான நடத்தைகளில் தாக்கம் செலுத்தியுள்ளன.

பல குடும்பங்கள் தங்கள் ஒரே ஆதாரமான இளைஞர்களை இவ்வாறான விபத்துகளில் இழந்து வருகின்றன. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான கடுமையான விபத்துகள் பதிவாகின்றன என்பதையும், அதில் பெரும்பாலானவை 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களைச் சேர்ந்தவை என்பதையும் பல்வேறு அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதனால் வீதி பாதுகாப்பு தொடர்பான கல்வி, கடுமையான சட்ட அமுலாக்கம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு ஆகியவை அவசரத் தேவையாக மாறியுள்ளன.
உலகளாவிய ரீதியில் வீதி விபத்துகள் மிகப்பெரிய பொது சுகாதாரப் பிரச்சினையாகக் கருதப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, ஆண்டுதோறும் உலகில் சுமார் 1.19 மில்லியன் மக்கள் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர்.
மேலும் 20 முதல் 50 மில்லியன் மக்கள் வரை காயமடைந்து நிரந்தர உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். 5 முதல் 29 வயதுக்குட்பட்டோரின் உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணிகளில் வீதி விபத்துகள் முதலிடத்தில் உள்ளன. உலகளாவிய மரணங்களில் 92% குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளிலேயே இடம்பெறுகின்றன.
இலங்கை முதலிடம்
இலங்கையும் இந்த உலகளாவிய நெருக்கடியிலிருந்து விலகவில்லை. உலக சுகாதார அமைப்பின் கணக்கீடுகளின்படி, இலங்கையில் 100,000 மக்களுக்கு சுமார் 11.5 முதல் 18 வரையிலான வீதி விபத்து மரண விகிதம் காணப்படுகிறது.
சில தரவுகளின்படி ஆண்டுதோறும் 4,000 இற்கும் மேற்பட்டோர் இலங்கையில் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர். மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளே அதிக ஆபத்தில் உள்ளவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.

வேகக்கட்டுப்பாடு மீறல், கவனக்குறைவான ஓட்டம், மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனை, போதிய வீதி ஒழுங்கின்மை ஆகியவை முக்கிய காரணங்களாகத் தொடர்ந்து சுட்டிக்காட்டப்படுகின்றன.
நம் வாழ்வில் பயணமென்பது அதி அற்புதமானது. அதனை இனிமையோடும் மகிழ்வோடும் அனுபவிக்க மனிதர்கள் விரும்புவார்கள். ஆனால் வீதி ஒழுங்குகளைமீறி போக்குவரத்து விதிகளுக்கு மாறாக வருபவர்களால் பயணங்கள் கொலைக்களங்கள் ஆவதும், வீதிகள் சுடலைகள் ஆவதுமாக இருக்கிறது நிலமை. காவல்துறை மற்றும் நீதித்துறையின் உரிய நடவடிக்கையும், போக்குவரத்துப் பற்றிய விழிப்புணர்வுமே இத்தகைய விபத்துக்களை தடுக்க உதவும்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 மணி நேரம் முன்