அடுத்தடுத்து கோவில்களில் கொள்ளை - அக்கரப்பத்தனை மக்களிடையே பரபரப்பு ( படங்கள்)
நுவரெலியா - அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் அடுத்தடுத்து, மூன்று கோவில்களில் திருடர்கள் கொள்ளையடித்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்கரப்பத்தனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை சின்னத்தோட்டம் சிறி முத்துமாரியம்மன் கோவிலினுள் புகுந்த கொள்ளையர்கள் விக்கிரகத்தின் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அத்தோடு, இதற்கு அடுத்துள்ள பச்சைபங்களா தோட்டம் சிறி முத்துமாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து, அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.
இதனை அடுத்து உருலேக்கர் தோட்டம் சிறி முத்துமாரியம்மன் ஆலயத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த உண்டியலையும் உடைத்த திருடர்கள் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனா்.
அக்கரப்பத்தனை நகரத்திற்கு அடுத்தடுத்த தோட்டங்களில் ஒரே நாளில் மூன்று கோவில்களின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்திருப்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கோவில் கொள்ளைகள் தொடர்பில் ஆலய பரிபாலன சபையினர்கள் அக்கரப்பத்தனை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து அக்கரப்பத்தனை காவல்துறையினரும், நுவரெலியா காவல்துறை குற்றத் தடுப்பு பிரிவினரும், கைரேகை பிரிவினரும் ஆலய கட்டிடங்களுக்குச் சென்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அத்தோடு சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என அக்கரப்பத்தனை காவல்துறையினர் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்.