சட்டத்துறை மாணவன் தாக்கப்பட்ட விவகாரம்! பொலிஸ்மா அதிபருக்கு அமைச்சர் கொடுத்த உத்தரவு
பேலியகொட பொலிஸ் நிலையத்தில் இறுதி ஆண்டு சட்டத்துறை மாணவரை கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் சம்கவம் குறித்து விரிவான விசாரணையை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் குறித்த விசாரணை நிறைவடையும் வரை சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் சாலிய பீரிஸ் ஆகிய இருவரும் தங்களின் அதிருப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தனது வழக்காளியை சந்திக்க பொலிஸ் நிலையம் சென்ற சட்டத்தரணி மாணவனே பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
. பேலியகொட பொலிஸ் நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மைத்திரி குணரட்னவின மகனான சட்டத்தரணி மாணவனே மிகாரா குணரட்னவின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது வழக்காளியை சந்திக்க சென்றதாகவும் இதன்போது தன்னை ஒரு சட்டத்தரணி மாணவன் என அடையாளம் கண்டு கொண்ட பொலிஸார் தன்னை கடுமையாக தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
பொலிஸ் ஜீப்பிற்குள் வைத்து அச்சுறுத்தப்பட்டதுடன் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.அத்துடன் காயங்கள் எவ்வாறு ஏற்பட்டது என்ற விபரத்தை மருத்துவருக்கு தெரிவிக்கக் கூடாது என அச்சுறுத்தியதாகவும் சட்டத்தரணியின் நண்பரும் சிவில் சமுக செயற்பாட்டாளருமான ரஜித் கீரத்தி தென்னக்கூன் தெரிவித்தார்.
அத்துடன் பொலிஸாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த சட்டத்தரணி மாணவனின்புகைப்படங்களை தென்னக்கூன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.