இனத்தின் வரலாற்றை பாதுகாக்க ஆவண காப்பகம் முக்கியம் - சட்டத்தரணி குமார வடிவேல் குருபரன்
சட்டத்தை மட்டும் வைத்து ஒரு சமூகத்தை மாற்ற முடியாத நிலையில் ஒரு சமூகத்தின் வரலாற்றை எடுத்துக்காட்டுவதற்கு ஆவண காப்பகம் முக்கியமானது என சட்டத்தரணி குமார வடிவேல் குருபரன் தெரிவித்தார்.
யாழில் (Jaffna) உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு தொடக்க உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு சமூகத்தின் தேவைகளை நோக்கங்களை நிறைவேற்ற சட்டத்தை மட்டும் பயன்படுத்த முடியாது.
தமிழ் மக்களின் கடந்த கால வரலாறு
ஒரு சமூகத்தின் கடந்த கால வரலாற்று சம்பவங்களை அறிய அவர்களின் ஆவணங்களை பாதுகாப்பது அவசியம்.

ஆவணக் காப்பகம் என்பது குறிப்பாக தமிழ் மக்களின் கடந்த கால வரலாறுகளை அறிவதற்கும் எதிர்வரும் காலங்களில் அதன் ஊடாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் ஆராய்வதற்கு உதவியாக இருக்கும்.
எங்களுடைய முயற்சிகளை நாங்களே பூர்த்தி செய்ய வேண்டும் என்ற சிறு முயற்சியின் காரணமாக யாழ்ப்பாண நூலகத்துடன் இணைந்து ஆவணக் காப்பகம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.
புதிய அரசியலமைப்பு
இந்த சிறிய தேடல் எமது வரலாற்றில் பின்னோக்கி இடம் பெற்ற அரசியல் நீதியான கடிதத் தலைப்புக்கள், கடிதப் பரிமாற்றங்கள் உடன்படிக்கைகள் என்பவற்றை தேடி இந்த ஆவண காப்பகத்தில் பதிவிட்டுள்ளோம்.
பல விடயங்கள் தேட வேண்டி உள்ளமையால் உங்களிடம் கிடைக்கப் பெற்ற ஆவணப்படுத்தப்பட வேண்டும் என கருதப்படும் விடையங்கள் அல்லது சேர்க்கப் பட வேண்டும் என கருதப்படும் விடயங்களை எம்முடன் தொடர்பு கொண்டு சமர்ப்பிக்க முடியும்.
ஆகவே புதிய அரசியலமைப்பு வர இருக்கின்றது என கூறப்படுகின்ற நிலையில் எமது ஆவணக் காப்பகத்தின் மூலம் புதிய அரசியலமைப்புக்கு தேவையான விடயங்களை அறிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |