ரஷ்ய எதிர்ப்பு வெறியின் ஒரு பகுதியாக ஒரு போதும் இருக்கமாட்டோம்- ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தத்தில் செர்பியா!
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 28 ஆவது நாளாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியும் ரஷ்யா போரை நிறுத்தவில்லை.
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதேவேளை ஐரோப்பிய நாடுகள், நேட்டோ நாடுகள் என பல்வேறு நாடுகளை கொண்ட அமைப்புகளும் ரஷ்யாவுக்கு எதிராக உள்ளன.
இந்நிலையில், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் வுலின் கூறுகையில்,
ரஷ்ய குடிமக்களின் சொத்துக்கள் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் சொத்துக்கள் திருடப்படுவது தொடர்பான ரஷ்ய எதிர்ப்பு வெறியின் ஒரு பகுதியாக செர்பியா ஒருபோதும் இருக்காது. ரஷ்யா மீது எங்களால் பொருளாதார தடைவிதிக்க முடியாது. ஆகவே ரஷ்ய ஊடகங்களை நாங்கள் தடைசெய்ய மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையில் உலக நாடுகள் ரஷ்யாவை புறக்கணிக்கும் நிலையில், செர்பியா ரஷ்யவின் பிரபல காஸ் நிறுவனமான காஸ்ப்ரோம் உடன் ஒரு புதிய எரிவாயு ஒப்பந்தத்தை செய்யவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.