யுத்த நிறுத்தத்தினை நடைமுறைப்படுத்துவது கடினம் - விளாடிமீர் புடின்
உக்ரைனின் நிரந்தர சமாதானத்தை தோற்றுவிக்கும் நோக்கிலான செயற்பாடுகளை தான் நிராகரிக்கவில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுடன் சென்.பீற்றர்ஸ்பேக்கில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.
உக்ரைனில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபிரிக்க மற்றும் சீன தலைவர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அடிப்படையாக வைத்து சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த நிறுத்தம்

உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடவடிக்கைகளை தொடரும் நிலையில், யுத்த நிறுத்தம் ஒன்றினை நடைமுறைப்படுத்துவது கடுமையான விடயம் எனவும் ரஷ்ய அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில முன் நிபந்தனைகளை கடைப்பிடிக்காமல் பேச்சுவார்த்தை மேடைக்கு வரப்போவதில்லை என உக்ரைனும் ரஷ்யாவும் முன்பு தெரிவித்திருந்தன.
கடந்த 1991 ஆம் ஆண்டில் இருந்தது போன்று தமது எல்லைக்கோடு அமைய வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தி வரும் நிலையில் ரஷ்யா அதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றது.
எதிரான இராணுவ நடவடிக்கை

அதேவேளை, நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கும் எண்ணம் ரஷ்யாவிற்கு இல்லை என அதிபர் விளாடிமீர் புடின் குறிப்பிட்டார்.
எனினும், சர்வதேச கோட்பாடுகளை மீறுவதாக ரஷ்யாவும் உக்ரைனும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.