ட்ரம்பின் சமாதான திட்டத்தை ஏற்கமறுத்தால்...உக்ரைன் ஜனாதிபதியை மிரட்டும் புடின்
போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்மொழிந்துள்ள 28 அம்ச திட்டம் இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் என்றும், உக்ரைன் இதை ஏற்க மறுத்தால் மேலும் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கான 28 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார்.
ட்ரம்பின் சமாதான திட்டத்தை ஏற்ற புடின்
இதைத்தொடர்ந்து, அமெரிக்கா முன்வைத்துள்ள, இந்த 28 அம்ச சமாதான திட்டத்தை போர் நிறுத்தத்திற்கான தொடக்க புள்ளியாக ஏற்றுக் கொள்வதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

ஆனால், உக்ரைன் இந்த சமாதான திட்டத்தை ஏற்க மறுத்தால், ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறும் எனவும், குபியான்ஸ்க் நகரை கைப்பற்றியது போல் மற்ற முக்கிய பகுதிகளையும் கைப்பற்றுவோம் என புடின் வெளிப்படையாக அச்சுறுத்தியுள்ளார்.
வோலோடிமிர் ஜெலன்ஸ்கி எதிர்ப்பு
ட்ரம்பின் சமாதான திட்டத்தில் ரஷ்யாவின் நீண்டகால கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளதால், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டால் தன்னுடைய மதிப்பை இழக்க நேரிடும் எனவும், இந்த சமாதான ஒப்பந்தத்தை ஏற்க வலியுறுத்தினால், நீண்டகால நட்பை அமெரிக்கா இழக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு
உக்ரைன் நலன்களுக்கு துரோகம் இழைக்காத மாற்று திட்டங்களை முன்வைக்க விரும்புவதாக அவர் உறுதியளித்து உள்ளார்.

மேலும், இந்த முன்மொழிவு ஐரோப்பிய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாகவும், உக்ரைனின் இறையாண்மையையும், பரந்த பாதுகாப்பையும் பலவீனப்படுத்தக்கூடும் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இந்நிலையில், இந்த சமாதான திட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்குமாறு ட்ரம்ப் நிர்வாகம் உக்ரைனை வலியுறுத்தி உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |