அரசுடன் சஜித் ரகசிய ஒப்பந்தம்? அம்பலத்துக்கு வந்த தகவல்
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்துடன் இரகசிய உடன்பாட்டில் பணியாற்றுகிறாரா? என ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விடயத்தில் சஜித் பிரேமதாஸ செயற்பட்ட விதம் குறித்து விமர்சனம் வெளியிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்தது. எனினும் அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பக்கப்பட்ட வேளையில் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை.
அதேபோல அவர் தீர்மானதிற்கு எதிராக பேசவுமில்லை. நம்பிக்கையில்லாத தீர்மானம் தேவைக்காக கொண்டுவரப்பட்டதில்லை. மாறாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இதனைச் செய்துள்ளார்கள்.
அரசாங்கம், எதிர்க்கட்சித் தலைவரை நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசவேண்டாம் என வலியுறுத்தியிருந்ததாக தெரியவந்துள்ளது.
ஆகவே சஜித் பிரேமதாச எதிர்க்கட்சிக்காக செயற்படுகிறாரா? அல்லது அரசாங்கத்திற்காக செயற்படுகின்றாரா? என்று கேட்க விரும்புகிறோம்.
யார் இரகசிய ஒப்பந்த்தம் செய்து பணியாற்றுவது என்பது தற்போது தெரியவந்துள்ளது என்றார்.