தேசிய வைத்தியசாலையில் மீண்டும் ரணிலைச் சந்தித்த சஜித் : வெளியிட்ட அறிவிப்பு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்று (25) காலை மீண்டும் ஒருமுறை சந்தித்துள்ளார்.
இதன்பின்னர் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச, ”நாட்டின் நீதித்துறை செயல்முறையை தாங்கள் மதிக்கின்றோம், ஆனால் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பே சில பிரிவுகள் நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது கவலைக்குரியது என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் நாட்டின் சுயாதீன நீதித்துறையில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், ரணில் விக்ரமசிங்க நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும்போது, நீதியான மற்றும் சுயாதீனமான தீர்ப்பு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது
கடந்த 22 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நாளை (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, முதலில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்தியர்களின் பரிந்துரையின் பேரில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது, பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் தனது மனைவிக்காக ஒரு விழாவில் கலந்துகொள்ள செப்டம்பர் 2023 இல் இங்கிலாந்துக்கு விஜயம் செய்தது குறித்து விசாரிக்கப்பட்ட பின்னர், "அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக" கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

