கோட்டாபயவின் செயலருக்கு எதிரான போர்கொடி தூக்கிய சமல்! ஆளும் தரப்பில் மேலும் சிலர் எதிர்ப்பு
அரச தலைவரின் செயலாளர் பதவியில் இருந்து பீ.பி. ஜயசுந்தரவை (P.B.Jayasundara) நீக்குமாறு கோரிக்கை விடுக்க அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருவதாக தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரச தலைவர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது, அமைச்சர்கள் சமல் ராஜபக்ச மற்றும் பந்துல குணவர்தன உட்பட அமைச்சர்கள் சிலர், அரச தலைவரின் செயலாளரை கடுமையாக விமர்சித்த பின்னர், அவருக்கு எதிரான இந்த நடவடிக்கை வேகமெடுத்துள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக அமைச்சர்கள் சிலர், அடுத்த வாரம் அரச தலைவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறான பின்னணியில், தான் அரச தலைவரின் செயலாளர் பதவியில் இருந்து விலக போவதாக ஜயசுந்தர அண்மையில் தனக்கு நெருக்கமான சிலரிடம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சமல் ராஜபக்ச, ஜயசுந்தரவை கடுமையாக விமர்சித்திருந்தமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. அரச தலைவரின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவின் சில ஆலோசனைகள் காரணமாகவே நாட்டில் பொருளாதார ரீதியான பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்பது ஆளும் கட்சியில் உள்ள சிலரது நிலைப்பாடாக உள்ளது.
முன்னாள் அரச தலைவரின் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் நிதியமைச்சின் செயலாளராக கடமையாற்றிய பீ.பி. ஜயசுந்தரவை, அமைச்சர் விமல் வீரவங்ச, பொருளாதார கொலைகாரன் எனக் கூறி கடுமையாக விமர்சித்திருந்தார்.