சிறிலங்கா அதிபர் பதவியை ஏற்க தயார் - சரத் பொன்சேகா அறிவிப்பு
அதிபர் பதவியை ஏற்க தான் தயார்
சிறிலங்கா அதிபர் பதவியை ஏற்க தான் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் என்னை அதிபராக தெரிவு செய்தால், பதவியை ஏற்க தயார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் குழு உட்பட சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் அதிபர் பதவிக்கு போட்டியிடுமாறு என்னிடம் கோரப்பட்டுள்ளது.
எனவே, நான் தெரிவு செய்யப்பட்டால் நான் பதவியை ஏற்றுக்கொள்வேன்” என்றார்.
தனிப்பட்ட விடயங்கள் குறித்து சஜித்திடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை
இந்த விடயம் தொடர்பில் உங்கள் கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசவிடம் தெரிவித்தீர்களா என ஊடகவியலாளர்கள் வினவியதற்கு,
எனது தனிப்பட்ட விடயங்கள் குறித்து நான் அவரிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என அவர் பதிலளித்துள்ளார்.
அத்தோடு, போராட்டக்காரர்கள் தமது கட்டுப்பாட்டிலுள்ள அரச கட்டடங்களை ஒப்படைக்க அவசரப்பட வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
