சிறிலங்காவில் திருப்புமுனையாக மாறிய கோட்டாபயவின் முடிவு! தலைகீழான திட்டங்கள்: சிதைந்த ராஜபக்சக்களின் கனவு
அதிபர் பதவிக்கு முடிவுரை
மக்கள் புரட்சி, இன்று கோட்டாபய ராஜபக்சவை இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் பதவியில் இருந்து விலக வைத்திருக்கிறது.
போர் வீரராக இலங்கையின் இரண்டாம் துட்டகைமுனுவாக தன்னை உருவகப்படுத்திய கோட்டாபய ராஜபக்சவை சொந்த மக்களே துரத்தியடிக்கும் நிகழ்வை காலம் கொண்டு வந்துவிட்டிருக்கின்றது.
ராஜபக்ச குடும்பம் , இலங்கை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஓர் அத்தியாயம். கடந்த 20 ஆண்டுகளாக ராஜபக்ச சகோதரர்கள் இலங்கையில் அரசியலில் தமது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
2015 மகிந்த ராஜபக்ச, அதிபர் தேர்தலில் தோல்வியை கண்ட பின்னர் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் போன்ற பல குற்றச்சாட்டுகள் இக் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்டது. இருந்தபோதிலும் எதிர்ப்பாராத ஓர் மக்கள் ஆதரவை உருவாக்கி இலங்கையின் அரசியலில் மீண்டும் காலடியெடுத்து வைத்தனர்.
2019 ஆம் ஆண்டில், அதிபரான கோட்டாபய ஆரம்பத்தில் மக்கள் நாயகனாக திகழ்ந்தார், ஆனால் இரண்டே ஆண்டுகளில் அனைத்தும் தலைகீழாக மாறியது.
அரசியல் பிரவேசம் அசைக்க முடியாத வரலாறு என்றால் அவரின் பதவி பறிப்பும் கல்வெட்டுக்களில் பொறிக்கும் வரலாறாகிவிட்டது.
வரலாற்றுப்பக்கங்களில் கோட்டாபய
1971 ஆம் ஆண்டு பாதுகாப்பு அதிகாரியாக சிறிலங்கா இராணுவத்தில் இணைந்த கோட்டாபய 1992ஆம் ஆண்டு வரை இலங்கை இராணுவத்தின் பல பிரிவுகளில் கட்டளை தளபதியாகவும் கடமையாற்றியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் ஆரம்பித்த காலப் பகுதியில் அதிகம் முணுமுணுக்கப்பட்ட பெயர் கோட்டாபய ராஜபக்சவின் பெயரே ஆகும்.
கோட்டாபய ராஜபக்ச, தனது 20ஆண்டு கால இராணுவ வாழ்க்கையில் இலங்கை இராணுவத்திற்காக ஆற்றிய சேவைக்காக அந்த காலப் பகுதியில் ஆட்சி பீடத்தில் இருந்த மூன்று அதிபர்களான ஜே.ஆர்.ஜயவர்தன், ரணசிங்க பிரேமதாஸ மற்றும் டி.பி.விஜேதுங்க ஆகியோரிடம் பல விருதுகளை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், பாதுகாப்புத் துறையில் பல உயரிய பதவிகளை வகித்த அவர், 1992ஆம் ஆண்டு இலங்கை இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். இதனையடுத்து அமெரிக்கா சென்று அமெரிக்கா குடியுரிமையும் பெற்றுக்கொண்டார்.
தனது சகோதரனான மகிந்த ராஜபக்ச, 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றியீட்டியதை அடுத்து இலங்கை வருகைதந்த கோட்டாபய ராஜபக்சவை பாதுகாப்பு செயலாளராக நியமித்தார் மகிந்த ராஜபக்ச. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் வலுப் பெற்றிருந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு யுத்தத்திற்கான அரசியல் ரீதியான காய் நகர்த்தல்களை மகிந்த ராஜபக்ச மேற்கொண்டாலும் போர் திட்டங்கள் மற்றும் வியூகங்களை இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து கோட்டாபய ராஜபக்ச வகுத்து யுத்தத்தை வழிநடத்தினார். இந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததாக அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவினால் அறிவிக்கப்பட்டது.
போர் வெற்றி நாயகன்
போர் வெற்றிக்கு கோட்டாபய ராஜபக்ச பாரிய பிரயத்தனத்தை வழங்கியமையால் அவரை போர் வெற்றி நாயகனாக சிங்கள மக்கள் கொண்டாடினர். தம் இனக்காவலர்களாக ராஜபக்சவினரை வணங்கினர். 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை அரசியலில் ராஜபக்ச குடும்பம் வீறுநடை போட்டு வலம் வந்தது.
இருப்பினும், 2015 ஆம் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச எதிர்பாராத ஓர் தோல்வியை சந்தித்தார். மகிந்தவின் தோல்வியை தொடர்ந்து மைத்திரி - ரணில் கூட்டாச்சி அரசை அமைத்துக் கொண்டது. மைத்திரியின் காலத்தில் சர்வாதிகாரம், ஊழல், மோசமான ஆட்சி, குடும்ப உறுப்பினர்களுக்குச் சலுகை வழங்கல் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ராஜபக்ச குடும்பத்தின் மீது சுமத்தப்பட்டன.
ஈஸ்ட்டர் தாக்குதல் எனும் ஓர் மனித அழிப்பால் மைத்திரி அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்தனர். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய ராஜபக்ச குடும்பம், இலங்கையை மீட்பதற்கும், காப்பதற்கும் தம்மைத் தவிர வேறு ஒருவர் இல்லை என்பதை சிங்கள மக்களிடையே ஆழப் பதியச் செய்து மீண்டெழுந்தனர்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன எனும் கட்சி உருவாக்கி சாதனை படைத்தார் பசில் ராஜபக்ச. உள்ளுராட்சியில் தேர்தலில் கட்சியை களமிறக்கி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற வைத்தார்.
இதனையடுத்து கோட்டாபயவுடன் அதிபர் தேர்தலில் களமிறங்கியது பெரமுன. மைத்திரி ரணில் கூட்டாட்சியை நம்புவதால் எதுவும் ஆகப்போவதில்லை, ராஜபக்சக்களின் கைகளிலேயே தேசிய பாதுகாப்பு இருப்பதாகவும், போரை முடித்த கோட்டாபயவே நாட்டை பாதுகாப்பார் என்பதையும் தெள்ளத்தெளிவாக சிங்கள மக்களிடம் எடுத்து சென்று தேர்தல் பரப்புரைகளை செய்தனர். மகாசங்கமும் கோட்டாபயவுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்தது.
69 லட்சம் மக்களின் விருப்பு வாக்குகள்
2019ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 69 லட்சம் மக்களின் விருப்பு வாக்குகளுடன் ஆட்சியமைத்தார் கோட்டாபய ராஜபக்ச. இலங்கை வரலாற்றில் தனிப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற ஒரேயொரு அரச தலைவர் என்ற சாதனையுடன் ஆட்சியமைத்துக் கொண்டார் கோட்டாபய ராஜபக்ச. இலங்கை அரசியல் வரலாற்றை தீர்மானிப்பது பௌத்தமும் சிங்கள மேலாண்மை வாதமும் தான் என்பதை கோட்டாபயவின் வெற்றி உறுதி செய்தது.
அதிபர் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய, தான் இந்த நாட்டின் வரலாற்றை மாற்றியமைத்ததாக சூளுரைத்தார். இலங்கையில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி தான் வெற்றியீட்டியதாகவும், பெரும்பான்மை மக்களின் வாக்குகளை மட்டும் கொண்டு வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
அவரின் வெற்றி என்பது சிங்கள மக்களின் மீட்சியாக கொண்டாடப்பட்டது. போரை முடித்த ராஜபக்சக்களே நாட்டையும் பாதுகாப்பார்கள் என்பதை சிங்கள மக்கள் கண்முடித்தனமாக நம்பினர். அரச தலைவராக பொறுப்பேற்ற கோட்டாபயவின் செயற்பாடுகளும் மக்களின் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை.அரச அலுவலகங்களுக்கு நேரில் சென்று சோதனை செய்வது ,கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திப்பது என ஆரம்பத்தில் மக்கள் நாயகனாக திகழ்ந்தார் கோட்டாபய.
இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கிய பொதுஜன பெரமுன எதிர்ப்பாராத ஓர் வெற்றியை பதிவு செய்தது. மூன்றில் இரண்டு பெருமான்மையுடன் ஆட்சியமைத்தார் கோட்டாபய.
இரண்டு ஆண்டுகளில் தலைகீழான நிலைமை
2019 இல் அதிபாரக கோட்டாபய ராஜபக்ச பதவி ஏற்ற போது 7.5 பில்லியன்கள் திறைசேரியில் இருப்பாக இருந்தது. ஆனால் தற்பொழுது திறைசேரியில் ரூபாவும் இல்லை, டொலரும் இல்லை என ரணில் அறிவித்துள்ளார். அரசியல் அனுபவமற்ற ஒருவரை போரில் சிறப்பாக செயற்பட்டார் என்ற எண்ணப்பாட்டோடும், சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பை அவரால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்கிற நம்பிக்கையாலும், கோட்டாபயவை சிங்கள மக்கள் அதிகம் நம்பினார்கள். ஆனால், நிஜத்தில் நடந்தது வேறு,
கோட்டாபயவின் ஆட்சியில் வெளிநாட்டுக்கொள்கைகள் பிழைத்தன. பொருளாதாரக் கொள்கைகள் சீர் குலைந்தன. உள்நாட்டு வளங்கள் வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கப்பட்டன. பொது மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்ந்தது. வரிசை யுகத்திற்குள் மக்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். வெளிநாடுகளுக்கு நாட்டின் ஒவ்வொரு பகுதிகளும் விற்கப்பட்டன. அதுமாத்திரமன்றி, ஊழல் நிறைந்த அமைச்சரவை ஒன்று தோற்றம் பெற்றது.
பல முறை அமைச்சரவையை மாற்றியும் கோட்டாபயவால் சிறந்த நிர்வாகத்தை கட்டமைத்து, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் பொது மக்களின் வாழ்க்கை அதளபாதாளத்திற்குள் சென்றது. கடன் சுமைகளாலும், வேலை வாய்ப்புக்களை இழந்ததாலும், எரிபொருள், மின்சாரம், சமையல் எரிவாயு என்று எதையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், கிடுகிடுவென பொருட்களின் விலைகள் அசுர வேகத்தில் உச்சத்தை தொட்டதாலும் கோட்டாபயவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வெகுண்டு எழுந்தனர்.
தான் எடுத்த முடிவுகளிலிருந்து கீழிறங்காமல், அதனை நிறைவேற்றியதன் விளைவுகளை அவரே அறுவடை செய்யும் அளவிற்கு இரண்டு ஆண்டுகளில் நிலைமை தலைகீழானது. சிங்கள மக்கள் ராஜபக்சாக்களின் ஊழல்களை தாமாகவே வீதிகளுக்கு கொண்டுவந்தனர். வாக்களித்து கோட்டாபயவை அதிபராக்கிய மக்களே வீதிக்கு இறங்கி "வீட்டுக்கு செல் கோட்டா" என போராடத் தொடங்கினர்.
நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தது. 'கோட்டா கோ ஹோம்' எனும் கோஷம் உரக்க ஒலிக்க தொடங்கியது . உக்கிரமடைந்த மக்களின் போராட்டங்களை தொடர்ந்து ராஜபக்ச குடும்பத்தின் சாம்ராஜ்ஜியம் மெதுவாக சரியத் தொடங்கியது. ராஜபக்சவினர் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ந்தனர். மே ஒன்பதாம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை துறந்தார். பின்னர் ஜூன் ஒன்பதாம் திகதி பசில் ராஜபக்ச பதவியை விட்டு விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இதனையடுத்து தனித்து நின்ற கோட்டாபயவை விரட்ட மக்களுக்கு அவ்வளவு நாட்கள் தேவைப்படவில்லை. அமைதியாக "கோட்டா கோ ஹோம்" என ஆரம்பித்த போராட்டம் இம் மாதம் 9 ஆம்(ஜூலை 9) திகதி மக்கள் புரட்சியாக வெடித்தது. தாம் தேர்ந்தெடுத்த தலைவரை தாமே விரட்ட மக்கள் அனைவரும் அலையென திரண்டனர். பாரிய தடைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அதிபர் மாளிகை அதிபர் செயலகம் அலரிமாளிகை என அனைத்தையும் கைப்பற்றினர். உலக வரலாற்றில் என்றும் இல்லாத ஓர் மக்கள் புரட்சியாக பதிவானது. சர்வதேச நாடுகள் அனைத்தும் வியந்து நின்றன. வெறுப்பின், விரக்தியின், கோபத்தின் உச்சத்தில் இருந்த மக்களால் கோட்டாபய ஜூலை 9ம் திகதி விரட்டியடிக்கப்பட்டார்.
பாரிய மக்கள் புரட்சி
பாரிய மக்கள் புரட்சியை எதிர்பார்த்திராத கோட்டாபய அங்குமிங்குமாக புகலிடம் கோரினர்,அமெரிக்கா விசா வழங்க மறுத்தது, இந்தியா தரையிறங்க மறுத்தது. இறுதியாக மாலைதீவு சென்றார் அங்கும் அவருக்கு எதிராக எதிர்ப்பு நிலவியது.
இதனையடுத்து பிரத்தியேக விமானம் மூலம் (14) சிங்கப்பூருக்கு பயணமானார். தனது இருப்பு உறுதிப்படுத்த பட்ட பின்னரே பதிவி விலகல் என அறிவித்திருந்ததன் படி இன்று தனது உத்தியோக பூர்வ பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் மஹிந்தயாப்பாவிடம் கையளித்து தனது அதிபர் பதவிக்கு முடிவுரை எழுதியுள்ளார் கோட்டாபய.
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார். இலங்கை அரசியல் வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தை பிடித்து விட்டு ஒரு பெரும் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது.
இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அதிபருக்கு எதிராகவும் பொதுமக்கள் வீதிக்கு இறங்கியது இல்லை.தனிப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றேன் என்ற அதே மக்கள் இன்று அவருக்கு எதிராக வீதியில் இறங்கி அவரை வீட்டுக்கும் அனுப்பியிருக்கின்றார்கள்.
போர் வெற்றி நாயகர்களான ராஜபக்ச குடும்பம், சிங்கள மக்களின் தேசிய காவலர்களாக திகழ்ந்த ராஜபக்ச குடும்பம், தமது குடும்பத்துக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து இலங்கையின் அரசியலை நடத்தி வந்த ராஜபக்ச குடும்பம், எதிர்ப்பவர்கள் அனைவரையும் தூக்கி எறிந்து சர்வாதிகாரிகளாக வலம் வந்த ராஜபக்ச குடும்பம் இன்று மக்கள் புரட்சியினை பார்த்து விழி பிதுங்கி நிற்கின்றது. ஆனால் அவர்கள் இதனை தமது அரசியல் வாழ்க்கையில் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள் என்பது மாத்திரம் உண்மை.
