பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட தகவல்
நாளை மறுதினம் (22) 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மதாஸ பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
மாணவர்கள் மனதளவிலாவது பாதிப்படையக்கூடிய வகையில் பெற்றோர்கள் அணுகக்கூடாது.
மிக முக்கியமாக பரீட்சையில் சித்தியடைவதற்கு, அதிக புள்ளிகளைப் பெறவேண்டும் என மாணவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டாம்.
பரீட்சை தினத்தன்று காலையில், அதிக உணவை உண்ணக் கொடுப்பதால், மாணவர்கள் பரீட்சை எழுத முடியாமல், நித்திரை ஏற்படக்கூடும் என்பதுடன், வயிற்றுவலி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அவர்கள் முகங்கொடுக்க நேரிடும். ஆகையினால், மாணவர்களுக்கு அதிக உணவை வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
தண்ணீர்போத்தல், தொற்று நீக்கித் திரவம், அடிமட்டம், பென்சில் உள்ளிட்ட அவசியமான பொருட்களை பெற்றோர்கள் மாணவர்களுக்கு கொடுத்து அனுப்ப வேண்டும்.
பாடசாலைச் சூழலில் சுகாதார விதிமுறைகளையும் உரியவாறு கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.