தையிட்டி தொடர்பில் அரச அதிபர் இரகசிய கலந்துரையாடல் - அம்பலப்படுத்தும் மக்கள்
அரசாங்க அதிபர் தனது வாகனத்தில் இருந்த அரச அதிபர் என்ற பலகையை தூக்கி விட்டு அமைச்சர் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுடன் சென்று புத்தபிக்குவுடன் இரகசியமாக பேசுகிறார் என தையிட்டியில் காணி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிமிடம் வரையும் எங்களுடன் யாரும் கதைக்கவில்லை என தையிட்டி காணி உரிமையாளர்கள் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்கள், “தையிட்டியில் காணியை பிக்கு விட்டுத் தருவதாக சொல்கிறார்கள்.
காணிக்கான உறுதிகள்
நீங்கள் காணிகளை விட்டுக் கொடுக்கத் தேவையில்லை.நீங்கள் எங்கள் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்து உள்ளீர்கள். உங்கள் தேவையை எம்மிடம் கூறுங்கள்.

எவ்வளவு தேவை என்பதை நம்மிடமே கதைக்க முடியும். சட்டவிரோத தையிட்டி விகாரை தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.
விகாரை உள்ள காணிக்கான உறுதிகள் அரச அதிகாரிகளிடம் எம்மால் பல தடவைகள் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் சந்திரசேகர் காணி உறுதிகள் சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
ஆளுநர், அரச அதிபர், பிரதேச செயலாளர்களிடம் காணி உறுதி வழங்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு அவை மக்களின் காணி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எங்கு வழங்கப் போகிறார்கள்
ஒரு வகையில் மக்களின் காணி என்ற ஏற்றுக் கொள்கிற அமைச்சர் தற்போது மாற்றுக் காணி என்று கதைக்கிறார். மக்கள் மாற்றுக்காணியையோ நட்ட ஈட்டையோ கேட்கவில்லை.

இவர்கள் மாற்றுக்காணி என்று எதை சொல்லுகிறார்கள் மாற்றுக்காணியை எங்கு வழங்கப் போகிறார்கள்? இவர்கள் காக்கைதீவிலும் மாற்றுக் காணியை வழங்க கூடும். அங்கு வாழ முடியாது.
காணிகளை இழந்த எங்களுடன் கலந்துரையாடாமல் புத்த பிக்குவுடன் கலந்துரையாடி காணிகளை விடுவிக்க பேசுகிறார்கள். அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாம் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவர்களுக்கு இந்த காணிகள் தொடர்பில் தெளிவான விளக்கம் இல்லை. அரச அதிபரும் ஆளுநரும் எம்மை அழைத்து பேசி இந்த காணிப் பிரச்சினையை தீர்க்கலாம். ஆனால் அவர்கள் உள்நோக்கத்துடன் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை” என தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |