உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - விரைவில் சிக்கப் போகும் பலர் : அரசின் அதிரடி அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதுவரை காலமும் வெளியாகாத பல விடயங்கள் தற்போதைய விசாரணைகளின் ஊடாக வெளிவந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பலர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் (Department Of Government Information) நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் விவகாரம் மற்றும் ஏனைய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதுவரை காலமும் வெளியாகாத பல விடயங்கள் தற்போதைய விசாரணைகளின் ஊடாக வெளிவந்துள்ளன. அவற்றில் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட விடயத்தில் குறிப்பிடப்பட்ட பெயர் மற்றும் தொடர்புடைய நபர்கள் விசாரணைகளின் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படுவார்கள். வெளிநாடுகளில் உள்ளவர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள்.
நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை. பல விடயங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. குற்றத்தின் இராச்சியமாகவே இருந்தது.
விசாரணைகள் சிறந்த முறையில் இடம்பெறுவதால் தான் பல விடயங்கள் வெளியாகியுள்ளன. விசாரணைகள் நிறைவுபடுத்தப்பட்டு வெகுவிரைவில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

