நாட்டில் சீனி, பால்மா மற்றும் சிமெந்துக்கு பாரிய தட்டுப்பாடு
நாட்டில் சீனி, பால்மா மற்றும் சிமெந்து ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறையால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு பகுதியில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள், நாடு முழுவதும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளைச் சீனி கிடைக்காத சூழ்நிலை உள்ளதாகவும், உள்ளூர் அளவில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி ஒரு கிலோவுக்கு ஒரு நேரத்தில் ஒரு நபருக்கு வழங்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
சிவப்பு சீனியை மட்டுமே விற்கும் லங்கா சதோசாவின் மூத்த அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவிக்கையில்,சதோசா வில் சீனி இருப்பு இல்லை என்பதால் நாடு முழுவதும் உள்ள சதோசா விற்பனை நிலையங்களில் சீனி இல்லை என்று கூறினார்.
பெரிய அளவிலான சீனி இறக்குமதியாளர்கள், இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அதிக எண்ணிக்கையிலான கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாகவும், ஒரு கிலோ சீனியை அதிகபட்சமாக 116 ரூபாய்க்கு விற்க முடியாததால் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
விலை உயர்வு இருந்தபோதிலும், இறக்குமதி செய்யப்பட்ட சிமெந்தை பெற இன்னும் ஒரு வாரம் ஆகும், இது சிமெந்திற்கான உள்நாட்டுத் தேவையின் 60 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்யும் என்று ஒரு பெரிய சிமெந்து நிறுவனத்தின் விற்பனைத் தலைவர் கூறினார்.
பெரிய கட்டுமான நிறுவனங்களின் பாரிய சிமெந்து இருப்பு காரணமாக, பொது சந்தையில் சிமெந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அதிக விலைக்கு சிமெந்து விற்பனை செய்யும் மோசடிகள் பற்றிய தகவல்கள் வந்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
வாரத்தில் இரண்டு நாட்கள் கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் பால் மாவை வாங்குவதால் போலி பால் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்களின் செய்தி தொடர்பாளர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் ஒரே நேரத்தில் 10 பால் பைக்கட்டுகளை எடுத்துச் செல்வதால், இரண்டு நாட்களில் பால் விநியோகம் முடிவடையும் என்று லக்ஷ்மன் வீரசூரிய கூறினார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பால் மாவுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும், பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுக்க கூடுதல் பால்மா அளவு கொழும்புக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்