உக்ரைன் மீது கொடூர யுத்தம்! கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன் முற்றுகைப் போராட்டம்
உக்ரைனின் மீது ஆக்கிரமிப்பு யுத்தத்தினை ரஷ்யப்படைகள் மேற்கொண்டு வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரி சிறிலங்கா தலைநகரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சிறிலங்கா தலைநகரில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக இன்றைய தினம் சிறிலங்காவிலுள்ள உக்ரைன் சமூகத்தினர் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
‘ரஷ்ய ஆக்கிரமிப்பை நிறுத்து’ - ‘போரை நிறுத்து’ -‘ரஷ்யா வீட்டிற்கு செல்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி ‘ரஷ்யா தொடங்கிய ‘முழு அளவிலான போர்’ இராணுவம் மற்றும் பொதுமக்களிடையே முதல் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக கோசமெழுப்பினர்.
தங்கள் குரலை உலகம் கேட்க வேண்டும் என்றும் உக்ரைனிய பிரஜைகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
அமைதியான உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்கள், இரவும் பகலும் இடைவிடாது தாக்குதலுக்கு உள்ளாகுகின்றன என்றும் சிறிலங்காவில் வசிக்கும் உக்ரைனியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனிய எல்லைக்குள் சட்டவிரோதமாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து எல்லையை கடந்து செல்கின்றன என்றும் உலகம் ரஷ்யாவை தீர்க்கமாக தடுக்க முடியும்.
இது சர்வதேசத்தின் நேரம் என்றும் இதனை தடுக்க உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு, ரஷ்யாவிற்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் போரை நிறுத்த அனைவருக்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.






