புதிய சிம் அட்டைகளை வாங்குவோருக்கு கட்டாயமாக்கப்படும் நடைமுறை!
முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகச் சிம் அட்டைகள் தொடர்பாக ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிம் அட்டைகளை விநியோகிப்பதற்கான விதிமுறைகளை நாங்கள் புதுப்பித்துள்ளோம். ஏனெனில், காவல்துறை போன்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் சிம் அட்டைகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் சட்டவிரோதச் செயல்பாடுகள் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.
அந்த நிறுவனங்களுடன் இணைந்து சிம் விதிமுறைகளைப் புதுப்பித்து, குறிப்பாக இது நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து (பெரும்பாலும் இந்த ஆண்டின் இறுதிக்குள்) புதிதாகச் சிம் அட்டைகளைப் பெறுபவர்கள் தங்களது நேரடிப் புகைப்படத்துடன் மட்டுமே அந்தச் சிம் அட்டையைப் பெற முடியும்.
3 கோடி சிம் அட்டைகள்
இது தொடங்கப்பட்ட பின்னர், 2027 ஆம் ஆண்டில் தொலைபேசி மற்றும் சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளர்களுக்கும், அதாவது வாடிக்கையாளரை அடையாளம் காண்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்தும் வகையிலான வேலைத்திட்டத்தைச் செயற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது வெளிநாட்டவர்களுக்கோ எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும்.
நாட்டிலுள்ள சட்டவிரோதச் செயற்பாடுகளுக்குச் சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். நாட்டில் சுமார் 3 கோடி சிம் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சேவைத் தரம் குறைவாக இருப்பதாக அந்த மக்களிடமிருந்து வரும் ஒரு முறைப்பாடாகும். தற்போது சேவை வழங்குநர்களின் தரவுகளின் அடிப்படையிலேயே நாங்கள் இயங்கி வருகிறோம். அதனை மேலும் துல்லியமாகக் கண்டறிவதற்கான கட்டமைப்பு எம்மிடம் இல்லை“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |