சிங்கப்பூரில் வாள்வெட்டுத் தாக்குதலை அடக்கிய இலங்கையருக்கு அந்நாட்டு காவல்துறை சூட்டிய புகழாரம்
சிங்கப்பூரின் புவாங்கொக் கிரசன்ட் பகுதியில் வாளால் தாக்கிய நபரை தடுத்து நிறுத்திய இலங்கையர் ஒருவர் சிங்கப்பூர் காவல்துறையினரிடம் விருது பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில் விநியோகித்தல் வேலை செய்யும் 35 வயதுடைய அமில சித்தன எனும் இலங்கையர் கடைக்கு சென்று விட்டு புவாங்கொக் கிரசன்ட் எனும் இடத்தில் போக்குவரத்துக்காக காத்திருந்தபோது வாள் ஏந்திய நபர் ஒருவர் பொதுமக்களை தாக்கியுள்ளார்.
அமில சித்தன வாள் ஏந்திய நபரை அப்பகுதியில் சென்றவர்களுடன் இணைந்து கட்டுப்படுத்த முற்பட்டுள்ளார். தனது இடது தோள்பட்டை, முழங்கை மற்றும் முழங்கால்களில் காயங்கள் இருந்தபோதிலும் காவல்துறையினர் வரும் வரை மற்றையவர்களுடன் சேர்ந்து அவரை அடக்குவதற்கு அமில சிந்தனவும் உதவியுள்ளார்.
"நான் அவரை கட்டுப்படுத்து முற்பட்ட போது அவர் என்னை நோக்கி ஓடி வந்து மூன்று முறை சரமாரியாக வெட்டினார்" என்று சித்தன காவல்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
37 வயதுடைய தாக்குதலாளி, சிந்தன மீது சரமாரியாக தாக்கிய பின்னர் வழுக்கி விழுந்துள்ளார். " நிலம் வழுக்ககூடியதாக இருந்ததால் அவன் கிழே விழுந்து விட்டான் ஆகையால் அவனை பிடித்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது” என்று சிந்தன மேலும் கூறினார்.
குறித்த நபர் வாளுடன் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் போதை மாத்திரைகளை உட்கொண்டதாக காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அவர் பொதுமக்களுடன் சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பின்னர், ஆயுதத்தை பயன்படுத்தி ஐந்து கார்களை தாக்கியதாகக் காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தாக்குதலாளியை கட்டுப்படுத்த உதவியதற்காக நேற்றைய தினம் (மார்ச் 15) காவல்துறையினரிடம் விருதுகளைப் பெற்ற ஆறு பேரில் அமில சிந்தனவும் அடங்குவார்.
அமில சிந்தன, லிம் ஜுன் யீ, முஹம்மது நூர் ரப்பானி மொஹமட் ஜைனி, லிம் ஜியாஜிங், முஹம்மது நௌஃபல் அஹ்மத்சுப்ரோண்டோ மற்றும் திருமதி கெர்வின் கோ ஆகிய ஆறு பேருக்கும் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் அங் மோ கியோ காவல்துறை பிரிவின் தலைமையகத்தில் விருது வழங்கப்பட்டது என சிங்கப்பூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.