இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் குருந்தூர்மலைக்கு சென்ற இந்து அமைப்பினருக்கு ஏற்பட்ட நிலை
இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து முல்லைத்தீவு குமுழமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள குருந்தூர் ஆதி சிவன் ஆலயத்தை வழிபடுவதற்காக சென்றிருந்தனர். அதன் போது குருந்தூர் மலை அடிவாரத்தில் இருந்த இராணுவத்தினர் அவர்களை அங்கு செல்ல விடாது இடைமறித்தனர் என அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் பகல் 1.30 மணியளவில் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து முல்லைத்தீவு குமுழமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள குருந்தூர் ஆதி சிவன் ஆலயத்தை வழிபடுவதற்காக சென்றிருந்தோம்.
அங்கு நாங்கள் சென்றிருந்த தருணம் எங்களை குருந்தூர் மலை அடிவாரத்தில் இருந்த இராணுவத்தினர் இடைமறித்தனர். அனுமதி பெறாமல் தற்போது மலைக்கு செல்ல முடியாது எனவும் அனுமதி பெற்ற பின்னரே செல்ல முடியும் என்பதையும் அவர்கள் தெரிவித்ததுடன், தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விடயம் தொடர்பாக அவர்கள் அறிவித்திருந்தார்கள். அதற்கு முன்னர் எங்களை சூழ்ந்து கொண்ட இராணுவ புலனாய்வாளர்கள் பலர் எங்களை துருவி துருவி விசாரணை செய்தார்கள். அந்த இடத்திலேயே நின்றிருந்த அவர்கள் எங்களை புகைப்படம் எடுத்தார்கள்.
அது மாத்திரமல்ல சிவசேனை அமைப்பிலிருந்து வருகின்றீர்களா? என எங்களை அவர்கள் பல முறை கேட்டார்கள். நாங்கள் அதற்கு நாம் பல இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்திருக்கின்றோம் என்பதை அவர்களுக்கு கூறியிருந்தோம். அந்த இடத்திலேயே எங்களுடைய அடையாள அட்டைகளை பெற்று அதனை புகைப்படம் எடுத்தது மாத்திரமல்ல எங்களுடைய பெயர்கள் மற்றும் என்ன தொழில் செய்கின்றோம் என்ற தரவுகளையும் எங்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள். நாங்கள் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் வரவுக்காக பல மணி நேரம் அங்கு காத்திருந்தோம். பின்னரே அங்கே தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்திருந்தார்கள். குறிப்பாக நாங்கள் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் அந்த குருந்தூர் மலை அடிவாரத்தில் காத்திருந்தோம்.
எங்களுடைய இந்து அமைப்புகள் சார்பாக பலர் பிரசன்னமாகியிருந்தோம் . சிவாச்சாரியார்கள், சட்டத்தரணி, மற்றும் இந்து சமய தொண்டு நிறுவனங்களின் ஆணையாளர்கள் , என பலரும் சென்றிருந்தோம். நாங்கள் எங்களுடைய மரபுரீதியான வழிபாட்டுத் தலத்தை பார்வையிடுவதற்கும் தரிசனம் செய்வதற்காகவும் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். நாங்கள் ஆலய வழிபாட்டிற்காக கொண்டு சென்ற பூக்கள் மற்றும் பூசைப்பொருட்கள் எவற்றையும் அவ்விடத்திற்கு கொண்டு செல்ல முடியாது என அவர்கள் கூறியிருந்தார்கள்.
அதுமட்டுமல்ல நாம் பஜனை பாடுவதற்காக கொண்டு சென்ற கருவிகளையும் மலைக்கு எடுத்துச்செல்ல எமக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் கற்பூரம் ஏற்றுவதற்கும் எங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் கொண்டு சென்ற இறைவழிபாட்டு பூசைப்பொருட்கள் எல்லாவற்றையும் எங்களுடைய வாகனத்தில் வைத்துவிட்டு வெறுங்கையோடு செல்ல புறப்பட்டோம்.
நீங்கள் மலைக்கு மேலே செல்கின்ற போது எந்த புகைப்படமோ அல்லது காணொளியை எடுப்பதற்கு தடை என்பதையும் எமக்கு பலமுறை அறிவுறுத்தினார்கள். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு மலைக்கு புறப்பட்ட தருணம் எங்களின் முன்னேயும் பின்னேயும் புலனாய்வாளர்களும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தார்கள்.
அவர்கள் எங்களுக்கு அந்த மலையை கூட்டிச் சென்று காட்டினார்கள். தொல்பொருள் திணைக்களத்தினுடைய அகழ்வாராட்சிக்கு உட்பட்ட அந்த மலையை காட்டும் வேளை எங்களோடு வருகை தந்த ஒரு முதியவர் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்து கொண்டு வழிபட முற்பட்ட வேளை அப்படி சொல்ல வேண்டாம் என தொல்பொருள் திணைக்கள அதிகாரி முதியவரை பார்த்துச்சொன்னார்.
எந்தவிதமான மதம் சம்பந்தப்பட்ட வார்த்தை பிரயோகங்களையும் பாவிக்கக் கூடாது அது முற்றிலும் தடை. பௌத்த மதத்திற்கும் இந்து மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு விடயம் இந்த இடத்தில் எந்த ஒரு மதம் சம்பந்தப்பட்ட வழிபாடுகளை தற்போது மேற்கொள்ள முடியாது என்பதை அவர் ஆணித்தரமாக சொல்லியிருந்தார்.
குறிப்பாக இந்த இடத்தில் எந்த ஒரு மதம் சம்பந்தப்பட்ட வழிபாடுகளையும் ஆற்றுவதற்கு தடை என அவர் கூறியிருந்தார். நாங்கள் மலை அடிவாரத்தின் கீழ் வருகின்ற போது அங்கே முல்லைத்தீவுப் பொலிஸார் பிரசன்னமாகி இருந்தார்கள்.
அது மாத்திரமல்ல புலனாய்வாளர்கள் அங்கே கடமையின் நிமித்தம் நியமிக்கப்பட்டிருந்தார்கள். எங்களை தொடர்ந்து புகைப்படம் எடுத்தார்கள். எல்லாவற்றையும் தாண்டி எந்த வழிபாடுகளும் மேற்கொள்ளாது நாங்கள் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டோம் எனத் தெரிவித்திருந்தார்.



